இப்ப முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா?... முகத்தில் அடித்தாற் போல கேட்ட வாசகர்!
சென்னை: லைக்கா புரடக்ஷனில் படம் எடுத்தால் மட்டும் யாரும் அதை ஆட்சேபிப்பதில்லை. ஆனால் முரளிதரன் விவகாரத்தில் ஏன் இப்படி என்று கேட்டுள்ளார் நமது வாசகர் ஒருவர். ஆனால் அவரே, ஆனால் இப்போது முரளிதரன் படம் ரொம்ப முக்கியமா.. தமிழக வீரர்கள் யாருமே உங்களுக்குத் தெரியலையா என்றும் பொட்டில் அடித்தாற் போல கேள்வி கேட்டுள்ளார்.
முத்தையா முரளிதரனைச் சுற்றி சுற்றாத சர்ச்சைகளே இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கம் முரளிதரனை மட்டும் விட்டு வைத்ததற்கான முக்கியக் காரணம், நம்ம பையன்.. போய்ட்டு போகட்டும் என்ற பிரபாகரனின் பெருந்தன்மையே காரணம் என்று சொல்வார்கள்.
இன்று மீண்டும் ஒரு சர்ச்சையில் முரளிதரன் பெயர் அடிபடுகிறது. இந்த முறை விஜய் சேதுபதி எடுத்த முடிவால் முரளிதரன் பெயர் வந்து நிற்கிறது. கடும் எதிர்ப்புகள் ஒருபுறம், இது ஒரு படம்தானே என்ற ஆதங்கம் மறுபக்கம்.. இரு கட்சிகளாக பிரிந்து எதிர்ப்பும், ஆதரவும் கொடி கட்டிப் பறக்கிறது.
இலங்கையில் பிறந்தது எனது தவறா.. முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை!
முரளியின் வாழ்க்கை
முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் ஈழப் பின்னணி இல்லாமல் இப்படத்தை எடுப்பது சாத்தியமற்றது. ஈழத்தைச் சொல்லாமல், ஈழத்தைத் தொடாமல் படம் எடுத்தால் அது நிச்சயம் அரை வேக்காட்டுப் படமாகவே அமையும். அது ஒரு புறம் இருக்கட்டும்.. இந்த சர்ச்சை தொடர்பாக நமது வாசகர் ஒருவர் ஒரு கேள்வி கேட்டுள்ளார்.
வாசகர் கேட்டாரே ஒரு கேள்வி
நடிகை ராதிகா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக அவர் இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளார். நடிகை ராதிகாவின் தாய் வழி பூர்வீகம் இலங்கை ஆகும். நமது வாசகர் கேட்ட கேள்வி இதுதான்... "சரியான கேள்வி. லைக்கா ப்ரொடக்ஷனில் படம் எடுத்தால் அமைதியாக படத்தில் நடித்து சம்பளமும் வாங்கிக்கொள்வர். அந்த படத்தையும் ஆ என்று வாயை பிளந்துக்கொண்டு பார்ப்பார். ஆனா எனக்கு என்ன கேள்வி என்றால் இப்போ முத்தையா முரளிதரன் பற்றிய படம் ரொம்ப முக்கியமா? ஏன் இந்தியாவில் சாதிக்காத விளையாட்டு வீரர்களா? எத்தனையோ தமிழக விளையாட்டு வீரர்கள் வெற்றி பெற்று எந்த ஒரு மீடியாவிலும் கவனிக்கப்படுவதில்லை".. இதுதான் அந்தக் கேள்வி.
ஆளே இல்லையா இங்கே
மிக மிக சரியான கேள்வி.. பொட்டில் அடித்தாற் போன்ற கேள்வி.. சத்தியமான கேள்வி. உண்மையில் தமிழகத்திற்கு பெருமை படைத்த எத்தனை விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள்.. இருக்கிறார்கள்..யாரையாவது நாம் கண்டு கொண்டோமா.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கிறோமா.. இந்த திரையுலகம் சினிமாக்களில் சாதித்த அரசியல்வாதிகளை மட்டுமே தூக்கி வைத்து கொண்டாடி படம் எடுத்து மகிழ்ந்திருக்கிறதே தவிர விளையாட்டில் சாதித்த எத்தனை பேர் இருந்தார்கள், இருக்கிறார்கள்.. அவர்களை வைத்து ஏதாவது படம் வந்திருக்கிறதா.
இதுதான் ஆதங்கம்
நமது வாசகரின் ஆதங்கமும் இதுதான். இவர்களை வைத்துப் படம் எடுக்க முனையாமல் இலங்கையைச் சேர்ந்த ஒரு வீரரைப் பற்றி படம் எடுத்து என்ன சாதிக்கப் போகிறீர்கள் என்று பொட்டென்று பொட்டில் அடித்தாற் போல அவர் கேட்டுள்ளார். அவரது கேள்வியிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. வடக்கிலாவது பரவாயில்லை. மேரி கோம் பற்றிப் படம் எடுத்தார்கள்.. தோனி பற்றிப் படம் எடுத்தார்கள்.. சச்சின் குறித்தும் கூட படம் வந்தது. இதோ கபில் தேவ் படம் கூட வரப் போகிறது.
சிவராமகிருஷ்ணன் இருக்காரே
இங்கேயும்தான் ஸ்ரீகாந்த் இருந்தார்.. Pinch Hitter.. அவர்தான் இக்காலத்து 20-20 அதிரடிகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டவர்.. எத்தனை சாதனை செய்தவர்.. அவரைப் பற்றிப் படம் எடுத்திருக்கலாமே.. எல். சிவராமகிருஷ்ணன் என்று ஒரு அருமையான ஸ்பின்னர் தமிழகத்தில் இருந்தார்... இப்போதும் கூட அவர் இருக்கிறார்.. அவரது கிரிக்கெட் வாழ்க்கை மிகக் குறுகியது.. ஆனால் படைத்த சாதனை மிகப் பெரியது.. அதைப் பற்றிப் படம் எடுக்கலாமே.
நம்ம அஸ்வின் இல்லையா
இவங்களை கூட விடுங்க, ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லையா.. சர்வதேச அளவில் தனி முத்திரை பதித்தவர். பல நாடுகளின் வீரர்களை ஓட ஓட விரட்டியவர். அவரைப் பற்றிக் கூட ஏதாவது டாக்குமென்டரியாவது எடுக்கலாமே.. அட பக்கத்து ஸ்டேட்டில்தான் கும்ப்ளே இருக்கிறார்.. அவர் செய்யாத சாதனையா.. அதைக் கூட படம் எடுக்கலாமே. ராகுல் டிராவிட் இருக்கிறார்.. அவரையும் படமாக்கலாம்.. பெரிய சாதனையாளர் இல்லையா அவரெல்லாம். கால்பந்தில் சாதித்த கேரளாவைப் பற்றிக் கூட படம் எடுக்கலாமே. ஐ.எம். விஜயனை விட யாராச்சும் இருக்காங்களா.
சாந்தி கதை இருக்கே
தமிழகத்தில் கபடியில் சாதித்தவர்கள் எத்தனை பேர்.. தடகளத்தில் சாதித்தவர்கள் எத்தனை பேர்.. நிறைய உள்ளனரே.. பெண்கள் எத்தனை சாதனையாளர்கள் உள்ளனர்.. நிறையப் படம் எடுக்கலாமே.. ஏன் சாந்தி இல்லையா.. அவரைப் பற்றி படம் எடுத்தால் உலகுக்கே அவரைப் பற்றி தெரிய வருமே.. யாரைப் பற்றியாவது நம்ம சினிமாக்காரர்கள் சிந்தித்திருப்பார்களா. மாற்றுத் திறனாளிகளாக இருந்து சாதனை படைத்த எத்தனை பேர் தமிழகத்தில் உள்ளனர். யாரைப் பற்றியாவது நம்ம சினிமாத்துறையினர் சிந்தித்திருப்பார்களா.
இல்லாட்டி முரட்டுக் குத்து!
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா இவ்வளவுதான்.. இதை விட்டால் ஜாதியைக் கையில் எடுப்பார்கள்.. அதையும் விட்டால்.. இருட்டறையில் முரட்டுக் குத்து குத்துவார்கள்.. இந்த ரேஞ்சில்தான் நாம போய்ட்டிருக்கோம். இப்படிப்பட்ட சூழலில் இங்குள்ள ஹீரோக்களைத் தூக்கி வைத்துக் கொண்டாடாமல் பக்கத்து நாட்டுக்காரரை கொண்டு வந்து கொஞ்ச வேண்டிய கட்டாயம் என்ன என்றுதான் பலரும் ஆதங்கப்படுகிறார்கள்.. யோசிச்சு பார்த்து உருப்படியான வேலைகளில் ஈடுபடுங்க.. இன்னும் கூட காலம் போய் விடவில்லை!