ஜெயலலிதாவின் வாரிசு என தீபா, தீபக் உரிமை கோர முடியாது.. ஐகோர்ட்டில் அதிமுக தரப்பு வாதம்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடைய சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறிய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி, அதிமுக நிர்வாகிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர். சென்னையை சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க கோரி வழக்கு தாக்கல் செய்தனர்.
அதே போல ஜெயலலிதாவின் வீட்டை நினைவிடமாக மாற்றுவதை எதிர்த்து ஜெ.தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த ஜெயலலிதா ரூ.17 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்தது. மேலும் இதற்காக ஜெயலலிதாவின் 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கியை தாங்கள் செலுத்த தயாராக இருப்பதாக தீபா மற்றும் தீபக் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதாவின் வாரிசாக தங்களை அறிவிக்குமாறும் கோரியுள்ளனர்.
ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக தரப்பு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோர் வாரிசு உரிமை கோர முடியாது என வாதிட்டது.
ஜெயலலிதாவின் வீடு உட்பட பல சொத்துக்கள் சொத்தாட்சியரின் பொறுப்பில் தான் உள்ளது எனவும் அதிமுக தரப்பு வாதிட்டது
இந்நிலையில் மறைந்த ஜெயலலிதாவின் சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்யவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் எந்த நிலையில் உள்ளது என பதிலளிக்க தமிழக அரசுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.