'யார் குடியைக் கெடுக்க டாஸ்மாக் கடைகள் திறப்பு? இது மனிதாபிமானமற்ற செயல்..' அதிமுக சுளீர்
சென்னை: கொரோனா பரவியதில் டாஸ்மாக் கடைகளுக்குப் பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், முதல்வர் ஸ்டாலின் இன்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்திருப்பது யார் குடியைக் கெடுக்க என்று அதிமுக மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
Recommended Video
கடந்த மாதம் கொரோனா 2ஆம் அலை தமிழ்நாட்டில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தைக் கடந்திருந்தது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்தது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் முதலில் தளர்வுகளற்ற ஊரடங்கு 2 வாரங்கள் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
|
டாஸ்மாக் கடைகள் திறப்பு
கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த 27 மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கொரோனா அதிகம் உள்ள கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் திறப்பு குறித்த அறிவிப்பை உடனடியாக திருப்பப் பெற வேண்டும் என அதிமுக சார்பில் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
யார் குடியைக் கெடுக்க
இது குறித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு எனத் தெரிந்தும், கொரோனா பரவியதில் டாஸ்மாக் கடைகளுக்குப் பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், டாஸ்மாக் திறப்பது மனிதாபிமானமற்ற செயல் எனத் தெரிந்தும், ஸ்டாலின் இன்று டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதித்திருப்பது யார் குடியைக் கெடுக்க? " என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
ஓபிஎஸ் அறிக்கை
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக ஒருபுறம் அறிவிக்கப்பட்டாலும், 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 முதல் 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்' என்ற அறிவிப்பு கொரோனா நோய்த் தொற்றுப் பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். இந்த அறிவிப்பினைப் பார்க்கும்போது, சமயத்திற்குத் தகுந்தாற்போல் ஒரு நிலைப்பாட்டினை திமுக எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் மேலோங்கி நிற்கிறது.
நிலைப்பாட்டை மாற்றும் திமுக
2020 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 3,000 என்றிருந்த நிலையில், உயிரிழப்புகள் சராசரியாக 3000 என்றிருந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர மற்றப் பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சரும் தன் வீட்டின் முன் சுருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்,
மூன்று மடங்கு அதிகம்
தற்போது தி.மு.க. ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர். 11-6-2021 அன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15759 என்றிருக்கின்ற சூழ்நிலையில், டாஸ்பாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மூன்று மடங்கிற்கும் மேலாக இருக்கும் சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி என்ற முடிவு முறைதானா என்பதை முதலமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வருவாயைவிட உயர் முக்கியம்
அரசு வருவாயை விட மனித உயிர் மிக முக்கியமானது என்பதன் அடிப்படையில், டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்ற முடிவினை திரும்பப் பெறுமாறு தமிழ்நாடு முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.