5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு பேரிடி.. டக்கென்று நிலைப்பாட்டை மாற்றிக் கொண்ட ரஜினி!
பாஜக தோல்வியை அடுத்து ரஜினியின் நிலைப்பாடு என்ன?
சென்னை: 5 மாநில பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது தேசிய அளவில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது. இந்த நிலையில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கூறி தனது நிலைப்பாட்டை சடாரென மாற்றிக் கொண்டு விட்டார் நடிகர் ரஜினிகாந்த்.
கன்னித்தீவுக்குகூட விடையும், முடிவும் கிடைத்துவிடும். ஆனால், ரஜினி அரசியலுக்கு வரப்போகிறாரா இல்லையா என்று தற்போது வரை தெரியவில்லை.
ஆனால் பாஜகவின் சாயல் மட்டும் தெளிவாக பதியும்படி கடந்த காலங்களில் நடந்து வந்துள்ளார் ரஜினி. அவரது பெரும்பாலான செயல்பாடுகள் பாஜகவின் சாயலிலேயே இருந்து வருகிறது.
ஏன் பேச வேண்டும்?
ரஜினி, ரொம்ப நாள் அரசியல் பற்றியும், சமூக பிரச்சனைகளை குறித்தும் பேசாமலேயே இருந்தார். எதற்குமே கருத்து சொல்லாமல் விலகியே இருந்தார். ஆனால் பேச ஆரம்பித்தால், ஏன்தான் பேசினாரோ என்பது போல ஆகிவிடுகிறது.
ஐகான் இல்லை
திமுக, அதிமுகவிற்கு என்று ஆரம்பத்திலிருந்தே ஒரு பாரம்பரியம் இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு அப்படி இல்லை, அக்கட்சிக்கென ஒரு ஐகான் என்றும் யாரும் இல்லை. அதனால்தான் எப்படியாவது ரஜினியை தன் பக்கம் இழுக்க எத்தனை முறை ரூட் விட்டு பார்த்து, தலைகீழாக தண்ணி குடித்து வருகிறது பாஜக. ஆனால் ரஜினி பாஜக பக்கம் போவாரா மாட்டாரா என தமிழக மக்கள் குழப்ப நிலையில்தான் உள்ளனர்.
ஆதரிக்கவில்லை
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டையே ரஜினியும் எடுத்தார். 100 நாள் நடத்திய மக்கள் போராட்டத்திற்கு ரஜினி செல்லவில்லை. மாறாக போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து விட்டதாக பாஜகவினர் போலவே பேசினார். அதேபோல, நீட் தேர்வு வேண்டாம் என்று சட்டம் இயற்றி எதிர்ப்பு சொல்லியும், ரஜினி இதைபற்றி ரொம்ப நாளைக்கு கருத்தே கூறவில்லை. அது தொடர்பான போராட்டங்களையும் ஆதரிக்கவில்லை. இதிலும் பாஜக நிலைப்பாடுதான்.
கருத்து சொல்லவில்லை
காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் - கதிராமங்கலம், நெடுவாசல் விவசாயிகள் - தொடர் போராட்டம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டபோதும் ரஜினி வாய் திறக்கவில்லை. இந்த விவகாரத்திலும் பாஜகவின் நிலையையொட்டியே அவரும் செயல்பட்டார். மக்களை சந்திக்கவில்லை. கருத்தும் சொல்லவில்லை.
மூன்று முகம்
காவேரி பிரச்சனை ஆகட்டும், முல்லைப் பெரியாறு உரிமைக்காக - நீருக்காக - நடந்த தொடர் போராட்டமாகட்டும் அதற்கும் ரஜினி வாய் திறக்கவில்லை. இதிலும் பாஜகவின் நிலைப்பாட்டை ஒட்டியே இவரும் நடை போட்டார். கிட்டத்தட்ட பாஜகவின் மறுமுகமாகவே திகழ்ந்து வருகிறார் "மூன்று முகம்" நாயகன்.
தேர்தல் முடிவுகள்
வரும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் கூட பாஜகவுடன் கை கோர்த்துதான் ரஜினி அரசியல் களம் காண்பார் என்ற பேச்சுக்களும் உள்ளன. இந்த நிலையில்தான் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவு பாஜகவுக்கு பாதகமாக வந்து சேர்ந்துள்ளது. இந்த தேர்தல் முடிவு தேசிய அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவிர்ப்பாரா?
தமிழகத்திலும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜகவுடன் இணைந்து போவது என்ற முடிவில் உள்ள பலரும் பின்வாங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ரஜினியும் பாஜகவுடன் இணைவதைத் தவிர்ப்பாரா என்ற இயல்பான கேள்வி எழுந்துள்ளது. அதை இன்று மாலை சூசகமாக உணர்த்தியுள்ளார் ரஜினி.
ஆவலுடன் மக்கள்
இன்று மாலை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாஜக செல்வாக்கை இழந்து விட்டதாக கூறி விட்டார். சில நாட்களுக்கு முன்புதான் பாஜகவை பலசாலி என்று கூறிப் பேசியிருந்தார். ஆனால் தற்போது பாஜக செல்வாக்கை இழந்து விட்டதாக கூறி தனது நிலைப்பாட்டையும் டக்கென மாற்றிக் கொண்டு விட்டார். போகப் போக இன்னும் எப்படியெல்லாம் ரஜினி மாறுவார என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.