நான் இருக்கிறேனு சொன்ன சந்தோஷ்பாபுவும் கைவிட்டது ஏன்.. மநீமவில் மே 7இல் என்னதான் நடந்தது?
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து துணைத் தலைவர் மகேந்திரன், பொன்ராஜ் உள்ளிட்டோர் விலகிய போது கமல்ஹாசனுடன் நான் நிற்கிறேன் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் விலகுவதாக அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 2.45 சதவீதம் வாக்குகளையே பெற்றது. இது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை விட குறைவானதாகும்.
''அமித்ஷாவை காணோம்.. கண்டா கையோடு கூட்டி வாருங்க''.. காவல் நிலையத்தில் புகார்.. அதிர்ந்த போலீசார்
இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தோல்வி குறித்து ஆலோசனை நடத்த கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
நம்பிக்கை
இந்த நிலையில் அன்றைய தினம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன், பொன்ராஜ் உள்ளிட்டோர் விலகினர். அதில் மகேந்திரன், தோல்வியிலிருந்து கமல் பாடம் கற்று கொள்ளவில்லை என்றும் இனி அவர் மாறுவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றும் தெரிவித்துவிட்டு விலகினார்.
சந்தோஷ்பாபு ட்வீட்
இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இது போல் ஒவ்வொருவராக ராஜினாமா செய்துவந்தனர். இந்த நிலையில் பொதுச் செயலாளராக இருந்த சந்தோஷ்பாபு ஐஏஎஸ், மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தை தரும் அருகதை கமலுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன் என சந்தோஷ் பாபு தெரிவித்திருந்தார்.
பத்மப்ரியா
ஆனால் மேற்கண்ட பதிவு போட்டு 6 நாட்களில் தனது நிலைப்பாட்டை சந்தோஷ்பாபு மாற்றிக் கொண்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சி அடிப்படை உறுப்பினர், பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு காரணம் என தெரியவில்லை. அது போல் தமிழச்சி பத்மப்ரியாவும் விலகியுள்ளார்.
மநீம கட்சி
இதையெல்லாம் பார்க்கும்போது மக்கள் நீதி மய்யம் கட்சியில் என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியில் சட்டடபை தேர்தலுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனம் நுழைந்து கமலுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தருவதாக விலகியவர்கள் கூறுகிறார்கள்.
தோற்று போனது
அந்த நிறுவனம் கூறுவதைதான் கமலும் கேட்கிறார், கள நிலவரத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும் சட்டசபைத் தோல்விக்கு யாருக்கு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நிர்வாகிகள் மீதும் திணித்த கமல்ஹாசன், தேர்தல் தோல்விக்கு தான் பொறுப்பு கிடையாது என்ற தோற்றத்தில் பேசியுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
சமாளிப்பாரா
பதவியில் உள்ள நிர்வாகிகளை ராஜினாமா செய்யுமாறு கமல் வற்புறுத்தியதாக கூறுகிறார்கள். செய்யாவிட்டால்... என கமல் மிரட்டும்தொனியில் பேசியதாக தெரிவிக்கிறார்கள். தோல்விக்கு தன் மீதான பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டு அதை நிர்வாகிகள் மீது போடுகிறாரே, ஒரு வேளை வென்றிருந்தால் அந்த வெற்றிக்கு நிர்வாகிகள்தான் காரணம் என சொல்லியிருப்பாரா? என கேள்வி எழுப்புகிறார்கள். இப்படியே ஒவ்வொரு நிர்வாகிகளாக விலகி வந்தால் கமல்ஹாசன் நிலைமையை எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.