அசராத அதிமுக.. ஷாக் கொடுத்த தேமுதிக.. எல் கே சுதீஷின் பேஸ்புக் பதிவின் பின்னணி என்ன?
சென்னை: 23 அல்லது 25 தொகுதிகள்.. அதாவது பாமகவுக்கு இணையான அல்லது கூடுதலாக தொகுதிகளை தேமுதிக கேட்ட நிலையில் அதிமுகவோ 13 முதல் 15 தொகுதிகள் வரை மட்டுமே வழங்கப்படும் என கூறியதன் விளைவுதான் சுதீஷின் பேஸ்புக் பதிவு என கூறப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு உடன்படிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் அதிமுக நேற்று முன் தினம் பாமகவை முதலில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் அக்கட்சிக்கு 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்கு அடுத்து தேமுதிகவுக்கு அழைப்பு வரும் என சொல்லப்பட்டது.
நமது முதல்வர் விஜயகாந்த்.. சுதீஷின் பேஸ்புக் பதிவால் பரபரப்பு!
உடன்பாடு
ஆனால் பாஜகவை பேச்சுவார்த்தை நடத்த அதிமுக அழைத்தது. இந்த பேச்சுவார்த்தை நள்ளிரவு வரை நீடித்தது. எனினும் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் இன்றைய தினமும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. இதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினர்.
அமைச்சர்கள்
அப்போது பாமகவை காட்டிலும் அதிக தொகுதிகள், அதாவது 25 தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்று அமைச்சர்களிடம் தெரிவித்துவிட்டனராம். இந்த தகவலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோரிடம் அமைச்சர்கள் தெரிவித்தனர். அப்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிகவை ஒரு இடத்திற்கு அமைச்சர்கள் வர சொல்லியதாக கூறப்படுகிறது.
தேமுதிகவுக்கு அதிருப்தி
ஆனால் தேமுதிகவே 25 அல்லது 23 தொகுதிகள் இதற்கு ஓகே என்றால் சொல்லுங்கள் பார்க்கலாம் என கூறிவிட்டதாம். மேலும் அமைச்சர்களுடனான சந்திப்பையும் புறக்கணித்துவிட்டதாம் தேமுதிக. பாமக, பாஜக உள்ளிட்டோரை ஈபிஎஸ், ஓபிஎஸ் அழைத்து பேசி வரும் நிலையில் தங்களுக்கு மட்டும் அமைச்சர்கள் மூலம் தூதுவிட்டது தேமுதிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.
விடாபிடி
மேலும் தேமுதிகவுக்கு 13 முதல் 15 இடங்கள் வரை மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுக தலைமை கறாராக கூறிவிட்டதாம். இந்த தகவலை கேட்டு தேமுதிக அதிர்ந்து விட்டதாம். பாமகவை விட குறைச்சலான தொகுதிகளை ஒப்புக் கொண்டால் , நாளை பெரிய கட்சி என்ற அந்தஸ்து போய்விடும் என்பதால் தேமுதிக விடாபிடியாக இருக்கிறதாம்.
பேஸ்புக் பதிவு
இதனிடையே இன்று தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல் கே சுதீஷ் ஒரு பேஸ்புக் பதிவை போட்டுள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு என பதிவிட்டுள்ளார், இதனால் மூலம் தேமுதிக தனித்து போட்டியிட போவதை அவர் மறைமுகமாக உணர்த்துகிறாரா என தெரியவில்லை. எதுவாகினும் பிரேமலதாவுக்கு தெரியாமல் சுதீஷ் பதிவிட்டதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.