அவசரப்பட வேண்டாம்.. ரஜினிகாந்த் திடீர் நிலைப்பாடு.. பின்னால் இருக்கும் ஐந்து காரணங்கள்!
லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறி இருப்பதற்கு பின் 5 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு அளிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறி இருப்பதற்கு பின் 5 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த தேர்தலில் புதிதாக களமிறங்க இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த தேர்தலில் என்ன முடிவெடுப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினார். சந்திப்பின் முடிவில்தான் ரஜினிகாந்த் அந்த அறிக்கையை வெளியிட்டார்.
என்ன சாராம்சம்
ரஜினிகாந்த் தனது அறிக்கையில். லோக் சபா தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தமிழக சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு. லோக்சபா தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு அளிக்கப்போவதில்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் பெயரை எந்தக்கட்சியும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்த கூடாது, என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது என்பதை ரஜினி தெளிவாக அறிவித்து விட்டார்.
மக்கள் என்ன நினைத்தார்கள்
இத்தனை நாட்கள் வரை ரஜினிகாந்த் இந்த தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். லோக்சபா தேர்தலின் போது இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எல்லோரும் நினைத்துக் கொண்டு இருந்தனர். இன்று ரஜினி, ரஜினி மக்கள் மன்ற அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த போது கூட, இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றே நினைத்தார்கள்.
ஆனால் என்ன
ஆனால் ரஜினிகாந்த் தற்போது எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது என்று அதிரடியாக அறிவித்து இருக்கிறார். தேர்தலில் போட்டியிடவும் போவதில்லை என்று தெரிவித்து இருக்கிறார். பல எதிர்கால அரசியல் திட்டங்களை மனதில் வைத்துதான் ரஜினி இந்த முடிவை எடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான சில நபர்கள் தெரிவிக்கிறார்கள்.
காரணம் என்ன
இதற்காக ரஜினியின் நெருக்கமான நபர்கள் தெரிவிக்கும் ஐந்து காரணங்கள்,
1. இந்த தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது ரஜினியின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்க வாய்ப்புள்ளது என்று நிர்வாகிகள் சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.
2. லோக்சபா தேர்தலின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். யாருடைய ஆட்சி வேண்டுமானாலும் அமையலாம். இதனால் இப்போது முடிவு எடுக்க வேண்டும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.
3. தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டு அரசியல் காய்களை நகர்த்தலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
4. கட்சியை முறையாக தொடங்கி, சட்டமன்ற தேர்தலுக்கு உழைப்போம், லோக்சபா தேர்தல் முக்கியம் கிடையாது என்றும் சிலர் மன்றத்தில் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.
5.இப்போது அவசரப்பட வேண்டாம் என்று ரஜினிக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் அவரிடம் ஆலோசனையின் போது கூறி இருக்கிறார்.
ஏமாற்றம்
இந்த 5 காரணங்கள்தான் ரஜினியின் இந்த முடிவிற்கு பின்னில் இருப்பது என்று கூறுகிறார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு விதத்தில் அதிர்ச்சியை அளித்து உள்ளது. அதே சமயம் வேறு ஏதாவது ஒரு கூட்டணிக்கு ஆதரவு அளித்து பிரச்சனை ஆகாமல் இருந்ததே நல்லதுதான் என்றும் கூட சில ரஜினி ரசிகர்கள் நினைக்கிறார்கள்.