சகோதரிக்கு மாமனாரால் பாலியல் தொல்லை?.. அதான் சுட்டுட்டேன்.. சவுகார்பேட்டை கொலையாளி பரபர வாக்குமூலம்
சென்னை: சகோதரிக்கு மாமனார் உள்ளிட்டோரால் பாலியல் தொல்லை இருந்ததை அடுத்து அவர்களை சுட்டுக் கொன்றதாக புனேவில் கைதான கைலாஷ் போலீஸிடம் வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சவுகார்பேட்டையில் வசித்து வந்தவர் தலீல்சந்த் (74). அவரது மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல் குமார் (40). இவருக்கு புனேவை சேர்ந்த ஜெயமாலா என்பவருடன் திருணமாகி இரு மகள்கள் உள்ளனர்.
தலீல் சந்த், புஷ்பாபாய், ஷீத்தல் குமார் ஆகியோ கடந்த 11-ஆம் தேதி மிகவும் கொடூரமான முறையில் நெற்றி பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதுகுறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைலாஷ்
இது தொடர்பாக ஜெயமாலாவின் தம்பி கைலாஷ் உள்பட 3 பேரை போலீஸார் புனே சென்று கைது செய்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது விசாரணையில் கைலாஷ் பகீர் தகவலை அளித்ததாக கூறப்படுகிறது.
அறிவுத் திறன்
அதாவது ஷீத்தல் குமாருக்கு அறிவுத் திறன் குறைவு என்பதை பயன்படுத்தி ஜெயமாலாவுக்கு மாமனார் தலீல் சந்த் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இந்த தொல்லை குறித்து தனது தம்பியிடம் ஜெயமாலா தெரிவித்ததாகவும் தெரிகிறது.
கொலை
ஏற்கெனவே மாமியார் கொடுமையால் அவதிப்பட்டு வந்த ஜெயமாலா தற்போது மாமனாரின் இந்த கேவலமான புத்தியால் மேலும் அவதியடைகிறாரே என ஆத்திரமடைந்த கைலாஷ் இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. அதனால் மூவரையும் சுட்டதாகவும் கூறப்படுகிறது.
தப்பிய கார்
கொலையாளிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளில் தலைமறைவாக உள்ள விஷால் பயன்படுத்தியது ஓய்வு பெற்ற விமான படை அதிகாரியுடையது என கூறப்படுகிறது. ஏற்கெனவே இவர்கள் தப்பிச் சென்ற கார் முன்னாள் ராணுவத்தினருடையது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.