குடியரசு தினத்தை ஜனவரி 26ம் தேதி கொண்டாடுவது ஏன்? சுவாரஸ்யமான வரலாற்று உண்மை
சென்னை: 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. இந்த நாளில் தான் நமது இந்தியா குடியரசாக மாறியது.
ஆனால் இந்தியா ஏன் ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாட தேர்ந்தெடுத்தது என்பதற்கு வரலாற்று ரீதியான சுவாரஸ்யமான உண்மை உள்ளது. அதை இப்போது பார்ப்போம்.
ஜனவரி 26, 1930 அன்று தனக்கான சுயராஜ்யத்தை அடையும் என்றும் நேரு அறிவித்தார். லாகூரில் அன்று சுதந்திர பிரகடனம்: அறிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் உரையை இப்போது பார்ப்போம்.
சிறப்பு விருந்தினர் இல்லாமல் நடைபெறும் குடியரசு தின விழா.. பார்வையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள்
உரிமை உண்டு
அனைத்து மக்களையும் போல, இந்திய மக்களுக்கும் சுதந்திரம் பெறுவதற்கும், உழைப்பின் பலனை அனுபவிப்பதற்கும், வாழ்க்கையின் தேவைகளை உணர்வதற்கும் மறுக்கமுடியாத உரிமை உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். எந்தவொரு அரசாங்கமும் மக்களின் உரிமைகளை ஒடுக்குமானால், அடக்குமுறை அரசை மாற்றவோ (அ) அகற்றவோ இந்திய மக்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம்.
சுரண்டிவிட்டது
பிரிட்டிஷ் இந்திய அரசு இந்தியா மக்களின் சுதந்திரத்தை பறித்ததோடு நின்றுவிடாமல், தன்னுடைய சுரண்டலால் இந்தியாவின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக ரீதியாக பாழடைய செய்து விட்டது. ஆகையால், பிரிட்டிஷ் உடனான தொடர்பை முடித்துக் கொண்டு, முழுமையான சுயராஜ்யத்தை (பூர்ணா ஸ்வராஜ்) அடைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அனுமதிக்க மாட்டோம்
நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் ஒரு விதியை இனியும் அனுமதிப்பதி மனிதனுக்கும் கடவுளுக்கும் எதிரான குற்றமாக நாங்கள் கருதுகிறோம். எவ்வாறாயினும், நமது சுதந்திரத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழி அகிம்சைதான் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.
ஜனவரி 26ல் தீர்மானம்
ஆகவே, பிரிட்டிஷ் அரசிற்கு கொடுத்த ஆதரவுகளை திரும்பப் பெறுவதன் மூலம் தயார்படுத்திக் கொள்வோம், வரி செலுத்தாமை உட்பட சட்ட ஒத்துழையாமை இயக்கத்திற்கும் தயாராக இருப்போம். இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியின் முடிவு உறுதி செய்யப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்தியாவின் முழு தன்னாட்சியை நிறுவுவதற்காக அவ்வப்போது வெளியிடப்படும் காங்கிரஸ் இயக்கத்தின் அறிவுறுத்தல்களை நிறைவேற்ற நாங்கள் இதன் மூலம் உறுதியுடன் தீர்மானிக்கிறோம் என்று அறிவிக்கப்பட்டது. இப்படி அறிவிக்கப்பட்ட ஜனவரி 26ம் தேதியை 17 ஆண்டுகளுக்கு பூர்ணா ஸ்வராஜ் தினமாக கொண்டாடினார்கள் மக்கள்.
அரசியல் அமைப்பு சட்டம்
இதனிடையே ஜப்பானிய படைகள், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நேசநாடுகளுடன் (Allied powers) சரணடைந்த நாளின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளான ஆகஸ்ட் 15 , 1947 அன்று இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதாக ஆங்கிலேயர்கள் அறிவித்தார்கள். அதன்படி சுதந்திரம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்திய தலைவர்கள் ஏகாதிபத்திய பெருமையை எதிரொளிக்கும் நாளில் சுதந்திரம் கிடைத்தது போல, தேசியவாத உணர்வின் பெருமையை எதிரொலிக்கும் நாளில் குடியரசு தினம் இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதாவது 1949-ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றத்தால் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டபோது. தேசிய பெருமையுடன் தொடர்புடைய ஒரு நாளில் இந்த அரசியலைப்பு ஆவணத்தை கொண்டாடுவது அவசியம் என்று நினைத்தனர்.அவர்கள் நினைத்தபடி. சுதந்திர பிரகடனம் நிறைவேற்றப்பட்ட ஜனவரி 26யை 1950 ஆண்டில் குடியரசு தினமாக கொண்டாடினர். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது.