அந்த ஒரு போஸ்டர்.. பதிலுக்கு முதல்வரின் அதிரடி உரை.. ஒரே நாளில் அதிமுகவில் 2 சம்பவம்.. முழு பின்னணி
சென்னை: அதிமுக கட்சிக்குள் அடுத்த முதல்வர் வேட்பாளருக்கான விவாதம் இன்று சூறாவளி போல எழுந்த நிலையில் அடுத்தடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனுமும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடனும் தமிழக அமைச்சர்கள், அதிமுக மூத்த உறுப்பினர்கள் மீட்டிங் நடத்தினார்கள். இந்த மீட்டிங் நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன, இதற்கு முன் நடந்த சில விஷயங்கள் எப்படி அதிமுகவின் இந்த பரபரப்புக்கு காரணம் ஆனது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் கடந்த ஒரு வாரமாக 2021 சட்டசபை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான தீவிரமான விவாதங்கள் நடந்து வருகிறது. சில அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் மீண்டும் முதல்வர் ஆவார், அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று கூறி வந்தனர்.
இன்னொரு பக்கம் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற சில அமைச்சர்கள் தேர்தலின் போது கட்சி கூடிதான் முதல்வர் யார் என்று தீர்மானம் செய்யும் என்று குறிப்பிட்டனர். இதனால் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பான விவாதங்கள் அதிமுகவில் எழுந்தது.
குழப்பத்துக்கு காரணமே அதுதான்.. ஆனால் அஇஅதிமுக அறிக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கலையே!
தீவிரம் ஆனது
இந்த நிலையில்தான் தேனியில் ஒட்டப்பட்ட அந்த போஸ்டர் அதிமுகவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி: பெரியகுளத்தில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லம் அருகே 'அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்' போஸ்டர் ஒட்டப்பட்டது. இதை ஓட்ட வைத்தது யார், இதற்கு பின்புலம் யார் என்பது இன்னமும் ரகசியமாக இருக்கிறது. ஏனென்றால் இந்த போஸ்டரில் வெறும் கிராம பொதுமக்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓ.பி. எஸ்தான் அடுத்த முதல்வர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் தீவிரமாக ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.
பிடிக்கவில்லை
தேனி அதிமுகவினர்தான் இந்த போஸ்டரை வைத்து இருக்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அந்த போஸ்டர் ஒட்டப்படுவதற்கு ஒரு நாள் முன்புதான், அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்று ஓ.பி.எஸ் டிவிட் செய்து இருந்தார். ஓ.பி.எஸ் தனது டிவிட்டில், தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!, என்று அமைதிக்கு அழைப்பு விடுக்கும் வகையில் டிவிட் செய்து இருந்தார் .
பிரச்சனை ஆனது
ஓ.பி.எஸ் இப்படி ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்து வெறும் ஒரே நாளில் ஓ.பி.எஸ் இல்லம் அருகே அடுத்த முதல்வர் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டர் குறித்த தகவல் இன்று அதிகாலையில் முதல் காதுக்கு சென்று இருக்கிறது. அதன்பின்தான் ஓ.பி. எஸ் வீட்டின் அருகில் ஒட்டப்பட்டு போஸ்டருக்கு முதல்வர் பழனிச்சாமி தனது சுதந்திர உரையில் தின உரையில் பேசினார் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் நிலவும் முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் இன்று பேசினார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
சொன்னார்
முதல்வர் பழனிச்சாமி தனது சுதந்திர தின உரையில், அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைப்பேன். மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன். மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம். மக்களின் நலனே முக்கியம். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தமிழக அரசு எப்போதும் செயல்படும் என்று கூறினார்.
என்ன காரணம்
முதல்வர் பழனிசாமி தனது உரையில் ''மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான்'' என்று குறிப்பிட்டது, விவாத பொருளாகி உள்ளது. இது தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கு பதிலாக அமைந்தது என்று அதிமுகவினர் சிலர் பேசிக்கொள்கிறார்கள். துணை முதல்வர் வீடு அருகே ஒட்டப்பட்ட போஸ்டரும், அதற்கு பதில் அளிக்கும் வகையில் முதல்வர் பழனிசாமி பேசியதும்தான் இந்த கருத்து வேறுபாடு மற்றும் அடுத்தடுத்த மீட்டிங்கிற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
மீட்டிங் அழைப்பு
இதை தொடர்ந்துதான் அடுத்தடுத்து அதிமுக மீட்டிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முதலில் துணை முதல்வர் ஓ. பி.எஸ் வீட்டில் மீட்டிங் நடந்தது. ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை செய்தனர்.துணை முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர்கள் முதல்வருடன் ஆலோசனை செய்தனர். முதல்வர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது .
இரண்டு முறை
இந்த மீட்டிங் இரண்டு முறை நடந்தது. முதல்வர் வீட்டில் இரண்டு முறையும், துணை முதல்வர் வீட்டில் இரண்டு முறையும் மீட்டிங் நடந்தது. போஸ்டர் பிரச்சனை குறித்தும், முதல்வரின் சுதந்திர உரை குறித்தும் இதில் பேசி இருக்கிறார்கள். இந்த மீட்டிங்கின் முடிவில்தான் அதிமுக பிரச்சனை தற்காலிகமாக இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து அடுத்த சில தினங்களுக்கு பேச கூடாது என்று இதில் முடிவு செய்துள்ளனர்.
வாய்ப்பூட்டு போட்டனர்
அதேபோல் அதிமுகவினர் யாரும் தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க கூடாது. தேவையில்லாத கருத்துக்களை பேச கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தவறான கருத்துக்களை கூறினால் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பாக கூட்டாக எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. எங்களுக்கு இடையே மோதல் இல்லை என்று உணர்த்தும் வகையிலேயே இவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர் என்று கூறப்படுகிறது.