அரசியல் விலகல்.. ஜெயலலிதாவும் இதே மாதிரி சொல்லி "சிஎம்" ஆனவர்தான்! "அக்கா" பாணியில் சசிகலா ஸ்கெட்ச்?
சென்னை: அரசியலிலிருந்து விலகுவதாக, சசிகலா இப்போது கூறிய அதே வார்த்தைகளை ஜெயலலிதாவும் சொல்லியுள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவ்வாறு சொன்னது மட்டும் கிடையாது.. அதற்கு பிறகு அவர் பலமுறை தமிழக முதல்வராகவும் பதவி வகித்தார். அந்த பழைய வரலாற்றைப் பார்த்தால் சசிகலாவின் இந்த முடிவு நிரந்தரமானதா என்பதில் பெரும் சந்தேகங்கள் உள்ளன.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1987 டிசம்பர் மாதம் முதல் அதிமுக தலைமை யாருக்கு என்பதில் பெரும் மோதல் ஏற்பட்டது. எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு ஜெயலலிதா வருவதற்கு முயற்சி செய்தார்.
ஆனால் கட்சிக்குள் இருந்த ஆர்எம் வீரப்பன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எம்ஜிஆர் மனைவி ஜானகியை, அதிமுக தலைமை பதவிக்கு முன்னிறுத்தியது வீரப்பன் அணி.
30 நிமிட வாக்குவாதம்- தேர்தலில் போட்டியிடாதே- சசிகலா உத்தரவால் ஷாக் ஆன டிடிவி தினகரன்- ஆக அடுத்து?
ஜெ. அணி, ஜா. அணி
ஜெயலலிதா அணியில் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் இருந்தனர். 1989-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது. ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஜெயலலிதா தரப்பு சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் ஜானகி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தது.
நிதி நெருக்கடி
இந்த நிலையில்தான் அதிமுக கட்சியை ஜெயலலிதா கவனித்துக் கொள்ளுமாறு ஜானகி பெருந்தன்மையோடு தெரிவித்துவிட்டார். ஆனால் அப்போது கட்சி மிகப் பெரிய நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டு இருந்தது. சீட் கேட்டவர்களிடமிருந்து வாங்கிய டெபாசிட் தொகையை திருப்பி தர முடியாத அளவுக்கு நிலைமை போய்விட்டது. இந்த நிலையில் கடும் மன உளைச்சல் காரணமாக அரசியலிலிருந்து விலகுவதாக ஜெயலலிதா முடிவெடுத்தார்.
நடராசன் டுவிஸ்ட்
அப்போது சசிகலா ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தார். எனவே அவருக்கு இந்த விவகாரங்கள் மிக தெளிவாக மற்றவர்களை விடவும் அதிகமாக தெரியும். அரசியலில் இருந்து விலகப் போவதாக ஜெயலலிதா அறிக்கை எழுதிக் கொடுக்க, அதை வெளியே விடாமல் நடராஜன் தனது வீட்டில் வைத்துக் கொண்டார் என்று கூறுவார்கள்.
நடராசன் வீட்டில் கடிதம்
இந்த நிலையில்தான் பண மோசடி செய்து விட்டதாக கூறி போலீசாரால் நடராஜன் கைது செய்யப்பட்டார். இந்த புகார் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆனால் ஜெயலலிதா கொடுத்த கடிதம் நடராஜன் வீட்டில் இருப்பதை அறிந்து அதை கைப்பற்ற, என்பதால் போலீசார் அந்த நேரத்தில் கைது நடவடிக்கை எடுத்து நடராஜன் வீட்டில் சோதனை செய்ததாக சொல்வார்கள். ஆனால் நடராஜன் கைது செய்யப்பட்டதும் ஜெயலலிதா தனது முடிவில் இருந்து திடீரெனப் பின்வாங்கி விட்டார்.
சசிகலா திட்டம்
அரசியலில் இருந்து விலகப் போவதில்லை. 1987-ஆம் ஆண்டு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதன் காரணமாக வேலை பளுவை குறைத்துக் கொள்வதற்காக ஒரு கடிதம் தயாரித்தேன். அதை குடும்ப நண்பர் நடராஜனிடம் கொடுத்து இருந்தேன். இதைத்தான் போலீசார் கைப்பற்றியிருப்பார்கள் என்று ஒரே போடாக போட்டார் ஜெயலலிதா. இதன்பிறகு 1991 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல், 2001 ஆம் ஆண்டு, 2011ஆம் ஆண்டு மற்றும் 2016ஆம் ஆண்டு ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக இருந்தார் என்பது வரலாறு. எனவே சசிகலா, நடராஜன், ஜெயலலிதா ஆகியோர் அறிந்திருந்த இந்த ராஜினாமா பல்டி விஷயங்கள் இப்போது மறுபடியும் சசிகலாவால் கையில் எடுக்கப் பட்டிருக்கலாம். தேர்தலுக்குப் பிறகு அவர் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்தால் ஆச்சரியப்பட தேவையில்லை, என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.