நீட் கோச்சிங் பெயரில் கல்லா கட்டும் வியாபாரிகளுக்கு வேட்டு... ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரை..!
சென்னை: நீட் கோச்சிங் என்ற பெயரில் கல்லா கட்டி வரும் வியாபாரிகளுக்கு வேட்டு வைக்கும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பல்வேறு பரிந்துரைகளை தமிழக அரசுக்கு முன் வைத்துள்ளது.
நீட் கோச்சிங் கட்டணமாக ரூ.10,000-ல் தொடங்கி 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவது குறித்த விவரத்தை விலாவாரியாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளது இந்த குழு.
இதனிடையே நீட் தேர்வு தொடர்பாக ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையின் முக்கிய சாரம்சத்தை பார்க்கலாம்..
நீட் தேர்வு: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது இல்லை ஏ.கே.ராஜன் குழு.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு வாதம்
நீட் தேர்வு
தமிழகத்தில் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்தது. அதன்படி அந்தக் குழு விரைந்து ஆய்வைத் தொடங்கி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை அறிந்து கடந்த ஜூலை மாதம் அறிக்கையாக தயார் செய்து தமிழக அரசிடம் சமர்பித்தது.
பரிந்துரைகள்
இந்நிலையில் ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கை சுகாதாரத்துறை அமைச்சக இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், நீட் தேர்வில் விலக்கு பெற தனிச்சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம், 2007-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு தடைச்சட்டத்தை மையமாக வைத்து விலக்கு பெறலாம், 12-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டே தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நடத்தலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.
கட்டணம்
இதுமட்டுமல்லாமல், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் முதல் தலைமுறை படிப்பவர்கள் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. மேலும், நீட் கோச்சிங் என்ற பெயரில் குறுகிய கால பயிற்சிக்கு ரூ.10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும், நீண்ட கால பயிற்சிக்கு ரூ.60,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வரைமுறை
இதனால் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கும் வரை நீட் கோச்சிங் வகுப்பு கட்டணத்தை அரசு வரைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நீட் பெயரில் கல்லா கட்டும் வியாபாரிகளுக்கு கடிவாளம் போடப்படும். இதேபோல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை விட சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பலனில்லை
மேலும், நீட் தொடர்ந்தால் சுகாதார கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாகுறை ஏற்படும் சூழல் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் அடையும் பலனைக் காட்டிலும் கோச்சிங் சென்டர் நிறுவனங்களுக்கு தான் அதிகம் பலன் என்பதை இந்த அறிக்கை சூசகமாக வெளிப்படுத்திவிட்டது.