அரசு மருத்துவர்களின் சம்பளம் எவ்வளவு.. அமைச்சர் விஜயபாஸ்கரின் கருத்தில் மாறுபடும் உயர்நீதிமன்றம்
பிகில் படத்தில் ராயப்பன் கேரக்டரில் விஜய் நடித்தது பற்றி அட்லி பேசியுள்ளார்.
சென்னை: அரசு மருத்துவர்களுக்கு 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 57 ஆயிரம் தான் வழங்கப்படுவதாக கூறியிருப்பதால் உண்மை என்பதை அரசு விளக்கினால் தான் தெரியவரும்.
ஊதிய உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் மருத்துவ பணியிடங்களை உருவாக்குதல் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் கடந்த 25ம் தேதி தொடங்கி ஒரு வாரம் வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவர்களின் சம்பளம் குறித்த கேள்விக்கு பதில் அளித்து பேசினார்.
40 ஆயிரம் ஊதியம்
அப்போது அவர் கூறுகையில், " தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ரூ 30 ஆயிரம் முதல் ரூ 40 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
ஆனால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவருக்கு ரூ 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. பணியில் சேரும் மருத்துவர் மேல் படிப்பு படிக்கவும் அனுமதிக்கப்படுவதோடு 3 ஆண்டுகளுக்கும் அவருக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படுகிறது.
விஜய பாஸ்கர்
மேல்படிப்பு படித்து முடித்துவிட்டு பணிக்கு மீண்டும் திரும்பும் மருத்துவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை கேட்கிறார்கள் என விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
உயர்நீதிமன்றம்
இந்நிலையில் நேற்று நீட் ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிக குறைவானது என தெரிவித்த நீதிபதிகள் புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்..
முரண்படும் கருத்துக்கள்
எனவே அரசு மருத்துவர்களுக்கு 80 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் 57 ஆயிரம் தான் வழங்கப்படுவதாக கூறியிருப்பதால் உண்மை நிலை என்ன என்பதை அரசு விளக்கினால் தான் தெரியவரும்.