கவனம் மக்களே! சென்னையில் அடுத்த 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. எங்கே தெரியுமா
சென்னை தெற்கு உஸ்மான் சாலையில் மேம்பாலப் பணிகள் நடக்க உள்ளதால் செப்.27 வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், அங்கு வரும் செப்டம்பர் 27 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. நெருக்கடியான சாலைகளால் பல நேரங்களில் சென்னையின் முக்கிய நேரங்களில் டிராபிக் அதிகமாகவே இருக்கும்.
இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகர் பேருந்துகள், மின்சார ரயில்கள், மெட்ரோ எனப் பல போக்குவரத்து ஆப்ஷன்கள் இருந்தாலும் கூட சாலைகளில் போக்குவரத்து குறைந்த பாடில்லை.
சென்னை மக்களே! நகரில் இனி டிராபிக் பிரச்சினை இருக்காது! 5 முக்கிய இடங்களில் வரும் புதிய மேம்பாலங்கள்
போக்குவரத்து
அதிலும் பீக் ஹவரில் சொல்லவே வேண்டாம்.. போக்குவரத்து உச்சத்தில் இருக்கும்.. ஒரு இடத்தில் இருந்து அருகே இருக்கும் மற்றொரு இடத்திற்குச் செல்லவே அதிக நேரமாகும். இதன் காரணமாகச் சென்னையில் போக்குவரத்தைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தற்போது இருக்கும் போக்குவரத்தை ஆராய்ந்து தேவையான இடங்களில் மேம்பாலத்தைக் கட்டி வருகிறது.
புது மேம்பாலம்
சென்னையில் தியாகராய நகரில் எந்தளவுக்கு டிராபிக் இருக்கும் என்பதை அங்குச் செல்லும் யாராலும் எளிதாக மறக்க முடியாது. இப்போது அங்கு உஸ்மான் சாலையில் 747 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் உள்ள நிலையில், தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1-வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தற்போது இருக்கும் உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சாய்தளத்தை இடித்துவிட்டு, புதிதாக அமைய இருக்கும் மேம்பாலத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை
தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து அமையும் இந்த மேம்பாலம், பர்கிட் சாலை, மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு மற்றும் போக் சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைகிறது. 1200 மீட்டர் நீளத்தில் 8. 40 மீட்டர் அகலத்தில் உருவாகும் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்படும் போது, நகரில் இருக்கும் பெரிய மேம்பாலங்களில் ஒன்றாக இது இருக்கும். இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கி முடிக்கச் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனிடையே இதனால் சில போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
போக்குவரத்து மாற்றம்
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள உள்ளதால், தெற்கு உஸ்மான் சாலை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28ம் தேதி முதல் செப்டம்பர் 27 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது.
எங்கெல்லாம் மாற்றம்
தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம். தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாகச் செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம்.
கவனம் மக்களே
அரங்கநாதன் சுரங்கப்பாதையிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலை அடையலாம். அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்குச் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்" என்று கூறப்பட்டுள்ளது.