அதிமுகவில் சசிகலா.. ஓபிஎஸ் சொன்னதில் என்னங்க தவறு?.. எடப்பாடி ஆதரவாளர்களுக்கு ஜேசிடி பதிலடி!
சென்னை: அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவெடுப்பர் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியதில் என்ன தவறு உள்ளது என அமைப்புச் செயலாளரான ஜே.சி.டி. பிரபாகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முடித்துக் கொண்டு சசிகலா விடுதலையான நிலையில் சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவை கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் அதிமுக பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தின் போது சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் எம்ஜிஆர் நினைவில்லம், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்றார்.
சீமானின் தாய் மதம் திரும்புங்க பேச்சு-நவ.5-ல் நாம் தமிழர் தலைமை அலுவலகம் முற்றுகை:இந்திய தேசிய லீக்
அப்போது ஒன்றிணைந்த அதிமுகவை மீண்டும் உருவாக்க அனைவரும் வாருங்கள் என அதிமுகவின் இரட்டை தலைமைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலா அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என கூறி வந்தனர்.
பன்னீர் செல்வம்
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சசிகலாவை சேர்ப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
இணை ஒருங்கிணைப்பாளர்
முன்னாள் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பே இல்லை என கூறியிருந்த நிலையில் ஓபிஎஸ் கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ்ஸின் கருத்துக்கு உடனடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்தார். சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என சொன்னவரே ஓபிஎஸ்தான். அப்படியிருக்கும் நிலையில் அவரை சேர்ப்பது குறித்து நேர்மறையான கருத்தை ஓபிஎஸ் சொல்வது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.
கருத்து வேறுபாடு
இதையடுத்து நேற்றைய தினம் ஓபிஎஸ் கருத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளரான ஆதிராஜாராம் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக அமைப்புச் செயலாளருமான ஜே.சி.டி.பிரபாகர் கூறுகையில் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து ஓபிஎஸ் தெரிவித்த கருத்தில் என்ன தவறு? அதிமுகவின் எதிர்கால நலனை சிந்திக்கக் கூடிய தலைமை நிர்வாகிகள் உரிய முடிவை எடுக்க வேண்டும். ஓபிஎஸ்- ஈபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இல்லை என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் கருத்து
ஓபிஎஸ் கருத்தை விமர்சித்து கே பி முனுசாமி அளித்த பேட்டியால் தென் மாவட்டங்களில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். சசிகலா தொடர்பான ஓபிஎஸ் கருத்துக்கு எழுந்த எதிர்ப்பால் அதிமுகவில் கோஷ்டி மோதல் மீண்டும் வெடித்துள்ளது. சசிகலாவை கடுமையாக விமர்சித்த பழனிச்சாமியையும் ஓபிஎஸ் மறைமுகமாக கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.