கர்நாடக தேர்தல் - அமெரிக்க தேர்தல்.. இரண்டும் சொல்வது ஒன்றுதான்.. மோடி - டிரம்ப்பிற்கு புரியுமா?
அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தல் மற்றும் கர்நாடக இடைத்தேர்தல் இரண்டின் முடிவுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது.
சென்னை: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தல் மற்றும் கர்நாடக இடைத்தேர்தல் இரண்டின் முடிவுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. இது மோடி, டிரம்ப் என்ற இரண்டு பெரிய தலைவர்களுக்கு முக்கிய பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது.
அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது.
அதேபோல் நேற்று கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது.
கர்நாடக முடிவு
கர்நாடகாவில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் - மஜத கூட்டணி அதிரடியாக வெற்றிபெற்றுள்ளது. பாஜக ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் பாஜக வென்றுள்ளது. மற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் - மஜத கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.
அமெரிக்க முடிவு
அதேபோல் அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாக தொடங்கி உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பின்னடைவை சந்தித்து இருக்கிறது. அமெரிக்க பிரதிநிதிகளின் சபையை சேர்ந்த 435 உறுப்பினர்களுக்கு இந்த தேர்தல் நடந்தது. இப்போதுவரை வந்த முடிவுகளின் படி 435 இடங்களில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி 215 இடங்களையும், டிரம்பின் குடியரசுக் கட்சி 192 இடங்களையும் பிடித்து இருக்கிறது. அமெரிக்க பிரதிநிதிகளின் சபை தேர்தல் முடிவுகள் டிரம்பிற்கு எதிராக வந்துள்ளது.
இருவருக்கும் ஒற்றுமை
இந்த முடிவுகளுக்கு இந்திய பிரதமர் மோடியும் , அமெரிக்க அதிபர் டிரம்பும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கொள்கைதான் இந்த தோல்விக்கும் காரணம். இருவரின் கொள்கை பல இடங்களில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக,
1. இரண்டு தலைவர்களும் இனங்களின் தனித்தன்மை, பல இன பன்மை என்பதற்கு எதிராக தேசியம் என்ற ஒரே கொள்கையை முன்னிலையில் வைக்கிறார்கள்.
2. இரண்டு தலைவர்களும், உள்நாட்டு நாட்டு பிரச்னையை விட வெளிநாடு குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஒருவர் வெளிநாடு அரசியலை கட்டுப்படுத்த பார்க்கிறார். இன்னொரு வெளிநாட்டில்தான் இருக்கிறார்.
3. இரண்டு தலைவர்களும் எதோ ஒரு வகையில் சிறுபான்மைக்கு எதிரான அரசியலை முன்வைக்கிறார்கள். இருவரும் ஏதோர் ஒரு வகையில் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளனர்.
4. இவர்கள் இருக்கும் இரண்டு கட்சியும் என்கவுண்டர் போன்ற அதீத தண்டனை முறை, தீவிர சட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
5. பிரிவினை அரசியல் !
6. இருவரும் தேவையில்லாத விஷயங்களில் அதிக செலவு செய்கிறார்கள். மாறாக அதிக தேவை இருக்கும் விஷயங்களுக்கு பணம் செலவு செய்வதில்லை. மெக்சிகோவில் சுவர் அமைப்பது : குஜராத்தில் சிலை அமைப்பது.
7. ஒருகட்சியில் இருக்கும் மற்ற தலைவர்கள் முன்னிறுத்தப்படாமல் ஒரே தலைவர் இரண்டு கட்சியிலும் முன்னிறுத்தப்படுகிறார்கள்.
இருவரும் நிரூபித்துள்ளனர்
இந்த நிலையில்தான் இந்த இரண்டு தேர்தல் முடிவுகளும் வந்துள்ளது. இரண்டிலும் இருவரும் மண்ணை கவ்வி இருக்கிறார்கள். மக்கள் இவர்களின் கொள்கையை ஏற்கவில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது. முக்கியமாக அமெரிக்க அதிபரின் தேசியவாத கொள்கைகள், மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் ( make america great again) உள்ளிட்ட எந்த வாசகமும் மக்களை துளி கூட ஈரக்கவில்லை. மொத்தமாக அவரை தேர்தலில் புறம் தள்ளி இருக்கிறார்கள்.
வரலாறு இப்படித்தான்
வரலாறு நெடுக அரசியல் மாற்றங்கள் இதைத்தான் எப்போதுமே சொல்லி வந்துள்ளது. தனித்த இனங்கள் முன்னேற வேண்டும் என்று ஆட்சி செய்தவர்கள் பெரிதாக வெற்றிகளை சந்தித்தது கிடையாது. இந்த தேர்தல் தோல்விகள் இரண்டு நாட்டு அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம். முக்கியமாக உலகின் இரண்டு தனிப்பெரும் தலைவர்களின் கொள்கைகளை!