அதிமுக உட்கட்சி பூசல்.. ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும்.. முக்கிய தலைகளை வைத்து ஸ்டாலின் பலே திட்டம்!
இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால்விட்டுள்ளார்.
சென்னை: இன்னும் ஒரு மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி கவிழும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சவால்விட்டுள்ளார். ஸ்டாலினின் இந்த அதிரடி பேச்சு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று வேலூர் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஆட்சி இன்னும் ஒரு மாதத்தில் என்ன ஆகும் என்பது தெரியும். மக்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இப்போது நினைத்தாலும் இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும்.
நிச்சயம் இந்த ஆட்சி கவிழப்போகிறதா இல்லையா என பொறுத்திருந்து பாருங்கள், என்று குறிப்பிட்டார். அவரின் இந்த பேச்சு தமிழக அரசியல் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் திட்டம்
ஸ்டாலினின் இந்த ஒரு மாத சவால் பேச்சுதான் தற்போது தமிழக அரசியல் ஹாட் டாப்பிக். சட்டசபை இடைத்தேர்தல், 18 எம்எல்ஏக்கள் வழக்கு எல்லாம் முடிந்தும் கூட திமுகவால் ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை. ஆனாலும் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் தொடர்ந்து நம்பி வருகிறார். ஆனால் இந்த முறை அவருக்கு புதிய சில விஷயங்கள் ஆட்சியை கவிழ்க்க கைகொடுக்கும் என்று கூறுகிறார்கள்.
எப்படி
ஆட்சியை கொல்லைப்புறமாக பிடிக்க மாட்டோம். நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். ஆட்சி தானாக கவிழும் என்று ஸ்டாலின் தொடர்ந்து கூறி வருகிறார். ஸ்டாலின் இதை ஒன்றும் காரணம் இல்லாமல் சொல்லவில்லை. இதற்கு பின் நிறைய திட்டம் இருக்கிது, அதிமுகவிற்குள் நடக்கும் உள்கட்சி பிரச்சனைகளை வைத்து ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார் என்று பேசிக்கொள்கிறார்கள்.
என்ன திட்டம்
தற்போது அதிமுகவிற்குள் சில பிரச்சனைகள் நிலவி வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு பின் அதிமுக கட்சிக்குள் பெரிய அளவில் உறவு சரியாக இல்லை. தலைவர்கள் தனி தனியாக இயங்க தொடங்கி உள்ளனர். முன்னாள் எம்பி மைத்ரேயன் வெளிப்படையாக அதிமுக மீது தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ்
அதேபோல் துணை முதல்வர். ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார். இவர்கள் வெளியில் மட்டும்தான் நெருக்கமாக இருப்பது காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் உள்ளுக்குள் இவர்களுக்கு இடையில் பிரச்சனை இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றது ஏன் என்ற மர்மமும் இன்னும் நீடித்து வருகிறது. லோக்சபா தேர்தலில் ஓ.பி.எஸ் தேனியில் மட்டும்தான் அதிக கவனம் செலுத்தினார்.
சட்டசபை இடைத்தேர்தல்
அவர் சட்டசபை இடைத்தேர்தலில் கவனம் செலுத்தவில்லை என்றும் அதிமுகவில் சிலர் பேசிக்கொள்கிறார்கள். அவருக்கு ஆட்சியை அப்போது காப்பாற்றும் எண்ணம் இல்லை. கட்சிக்குள் இதனால் ஜெயக்குமார் உள்ளிட்ட சில தலைவர்கள் ஓ.பி.எஸ் மீது அதிருப்தியில் உள்ளனர் என்று கட்சிக்குள் பேசிக்கொள்கிறார்கள். இந்த அதிருப்தியை ஸ்டாலின் தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
உட்கட்சி சண்டி
அதிமுகவில் இருக்கும் உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்திக் கொள்ளும். ஏற்கனவே செந்தில் பாலாஜி, தங்க தமிழரசன் உள்ளிட்ட முன்னாள் அதிமுக, அமமுக தலைகளை ஸ்டாலின் தன்பக்கம் இழுத்துவிட்டார்.இதேபோல் மைத்ரேயன் எப்போது வேண்டுமானாலும் திமுக பக்கம் சாயலாம் என்கிறார்கள்.
ஆனால் ஒரு விஷயம்
ஆகவே முக்கியமான சில அதிருப்தி அதிமுக தலைவர்களை தன்பக்கம் ஸ்டாலின் இழுக்கலாம் என்று கூறுகிறார்கள். இதன் மூலம் ஆட்சி தானாக கவிழும் என்று ஸ்டாலின் நம்புகிறார். ஆனால் இதெல்லாம் ஒரு மாதத்தில் நடக்கும் என்று ஸ்டாலின் எப்படி நம்புகிறார் என்று தெரியவில்லை. ஸ்டாலினின் இந்த ஒரு மாத சவால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.