அடங்காமல் எரியும் துக்ளக் தீ.. பாஜக தேவையில்லை.. தனக்குத்தானே காவி சாயம் பூசிக் கொள்கிறாரா ரஜினி!
பாஜக நடிகர் ரஜினிகாந்த்தை முழுமையாக நம்பி கொண்டிருக்கிறது
Recommended Video
சென்னை: பாஜகவின் அடுத்த திட்டம் என்ன? ரஜினி ஏன் அப்படி ஒரு வார்த்தையை துக்ளக் விழாவில் சொல்ல வேண்டும்? பாஜகவின் புகழ்பாட ரஜினி அப்படி பேசியபடி ஆயிற்றா? அல்லது பாஜக இன்னமும் ரஜினியை பெரிதும் நம்பி கொண்டிருக்கிறதா? இதற்கெல்லாம் என்ன காரணம்?
ரஜினியின் நிலைப்பாடு கால் நூற்றாண்டாக மட்டுமல்ல.. இன்றுவரைகூட நமக்கு சரியாக புரியவில்லை.. எனக்கு யாரும் காவி சாயம் பூச முடியாது என்ற வார்த்தையைகூட நம்ப முடியவில்லை.
ஏனென்றால், இவரே தனக்கு காவி சாயம் பூசி கொள்வது போலதான் துக்ளக் விழா பேச்சு அமைந்தது.. ரஜினி அப்படி பேச என்ன காரணம்? ஒரு விழாவுக்கு செல்லும்போது, அந்த பத்திரிகையை புகழ்ந்து பேசுவது என்பது இயல்பான ஒன்றுதான்.
துக்ளக் விழா
அதற்காக இன்னொரு பத்திரிகையை தாழ்த்தியும், குறைத்தும் பேசுவது அழகல்ல... துக்ளக் விழாவுக்கும், திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? தேவையில்லாத ஒப்பீடு இது.. இப்படி சிறுமைப்படுத்தி பேசியதை தவிர்த்திருக்கலாம்.. ஒருவேளை அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே திமுக தன்னுடைய எதிரி என்பதை மறைமுகமாக ரஜினி சொல்ல வருகிறாரா என்றால், அப்படியும் நம்மால் உறுதியாக சொல்ல முடியாது.
திமுக
ஏனென்றால் ரஜினி கட்சி தொடங்கினால்தான் அவர் கொள்கை என்ன என்று நமக்கு தெரியும், கொள்கை இதுவென்று தெரிந்தால்தான், அது திமுகவுக்கு எதிரானதா, ஆதரவானதா என்பதையும் நம்மால் வரைப்படுத்த முடியும், ஒப்பிட்டு பார்க்க முடியும்.
பாஜக கருத்துக்கள்
அப்படியானால் ஆர்எஸ்எஸ், பாஜக கருத்துக்களை பிரதிபலித்து வரும் துக்ளக்கை ரஜினி பெருமைப்படுத்தி பேச காரணம், இன்னமும் பாஜக ஆதரவாளர் என்பதை வெளிப்படுத்தி கொள்ளவா? இது எதுவுமே இல்லை, வெறும் யதார்த்த பேச்சு என்று எடுத்து கொள்வதா? போன்ற பல அதிர்வலைகளை அவரது பேச்சு ஏற்படுத்தி உள்ளது. சோ இருந்தபோது, துக்ளக் பத்திரிகை கொஞ்சமாவது நடுநிலையில் இருந்தது.. பேலன்ஸ்டாக அதை சோ வைத்திருந்தார்.. ஆனால் அவர் மறைவுக்கு பிறகு முழுசாக ஆர்எஸ்எஸ் பிம்பத்தை தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது என்பதை வாசகர் கூட்டமே மறுக்க முடியாது.
கூட்டணி தயக்கம்
திராவிட கட்சிகளின் தயவு இல்லாமல் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்ற யதார்த்தத்தை பாஜக புரிந்து கொண்டாலும், கூட்டணி வைக்க தயங்கியது.. சித்தாந்த ரீதியிலும், கொள்கை ரீதியிலும் இது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருந்தாலும், அதை உடைத்து கூட்டணிக்கு அடித்தளமிட்டது முதலில் ஜெயலலிதாதான்.. ஜெயலலிதா, கருணாநிதி என்ற பிம்பங்களை கொண்டு ஓட்டு வங்கியை பெற்று கொண்டிருந்த பாஜக, இவர்களின் மறைவுக்கு பிறகு என்ன செய்வதென்ற கலக்கத்துக்கும், யாரை கொண்டு தமிழகத்தில் கால் பதிப்பது என்ற குழப்பத்துக்கும் ஆளானது.
ரஜினி
எடப்பாடி ஆட்சிக்கு சிபிஐ, ரெய்டு உள்ளிட்ட பல நெருக்கடிகளை அடுத்து கூட்டணி அமைத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை.. ஜெ., கருணாநிதி மறைவுக்கு பிறகு ரஜினியை அதிகமாக நம்ப வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு பிறகுதான் அமித்ஷா நேரிடையாக தமிழகம் வந்து, "என்ன பண்ணுவீங்களோ தெரியாது, தாமரை மலர்ந்தே ஆக வேண்டும்" என்று கறாராக சொல்லிவிட்டு போனார்.
அமித்ஷா
''ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், அவருக்காக பாஜகவின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்''என்று அன்று அமித்ஷா பேசிய பேச்சே இதற்கு சான்றாக இருந்தது. அடிப்படையிலேயே கருத்தொற்றுமை இருப்பதாலோ, அல்லது வேறு காரணத்திற்காகவோ தெரியவில்லை, ரஜினியின் பல கருத்துக்களும் பாஜக ஆதரவு கொண்டவையாகவே இருந்து வருகின்றன.
சாத்தியமா?
ஆனால், திராவிட கட்சிகளை தவிர்த்துவிட்டு, யாராலும் தமிழகத்தில் தனித்து களம் காண்பது எளிதான விஷயமல்ல.. பாஜக என்றில்லை, தேசிய கட்சியான காங்கிரசால்கூட அது இப்போது வரை முடியவில்லை.. அப்படி இருக்கும்போது, ரஜினியால் மட்டும் எப்படி திராவிட கட்சிகளை தமிழக மக்கள் மனதில் இருந்து தனியே பிரித்துவிட்டு, தன் பக்கம் இழுத்து கொள்ள முடியும்? ரஜினியை பாஜக முழுசாக நம்பினாலும், தமிழகத்தில் ரஜினி மூலமாகவாவது தாமரை மலர்வது அவ்வளவு சாத்தியம் இல்லை.. அதற்கு பல காலம் பிடிக்கும் என்பதுதான் திராவிட கட்சிகளின் வலிமை.. ஆனால் இன்னமும் ரஜினியை பாஜக நம்பிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?!