"பட்ஜெட் எப்படி இருக்கும்? எதிர்பார்ப்பு என்ன?" அமைச்சர் பிடிஆர் சொல்ல சொல்ல.. கவனமாக கேட்ட கூட்டம்
பட்ஜெட் எப்படி இருக்கும் என்பது குறித்து மாநில நிதியமைச்சர் பிடிஆர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தலைநகர் சென்னையில் கருத்தரங்கு ஒன்றைத் தொடங்கிவைத்தார். அப்போது பேசியபோது பட்ஜெட் குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்றம் தொடங்கியது.
நாளைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக வரும் ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.
"விரைவாக மீண்டுவிட்டோம்.." கொரோனாவுக்கு முந்தைய நிலையை ஏற்கனவே அடைந்துவிட்டோம்- பொருளாதார ஆய்வறிக்கை
பொருளாதார ஆய்வறிக்கை
முன்னதாக இன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24இல் 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22இல் இது 8.7%ஆகவும் அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டில் இது 7%ஆக இருந்தது நினைவுகூரத்தக்கது. மேலும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இந்திய மற்ற நாடுகளைக் காட்டிலும் விரைவாக மீண்டுவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மத்திய பட்ஜெட் தாக்கலாகிறது.
மத்திய பட்ஜெட்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்பு மோடி 2.o அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தனிநபர் வருமான வரி உள்ளிட்ட சில பிரிவுகளில் முக்கிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தாண்டு 9 மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், பட்ஜெட்டை பலரும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
கருத்தரங்கு
தமிழ்நாடு வரும் 2030க்குள் ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை ஏற்படுத்தத் தேவையான சூழலை உருவாக்குதல் என்ற தலைமையில் தமிழ்நாடு மாநில வளர்ச்சி கவுன்சில் சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கைத் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். கொள்கை, உட்கட்டமைப்பு, சந்தை சூழல் எனப் பல விவகாரங்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட உள்ளன.
அமைச்சர் பிடிஆர்
அரசுத் துறைச் செயலாளர்கள் தொடங்கி தொழில்துறை வல்லுநர்கள் வரை பல்வேறு தரப்பினரும் உரையாற்றும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கைத் தொடங்கி வைத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாடு பொருளாதாரம் ஒரு ட்ரில்லியன் டாலராக மாற பல காரணங்கள் உள்ளன. உலக பொருளாதாரத்தின் நிலை கூட இதில் முக்கிய பங்கு வகிக்கும். இதுபோல இலக்கை அடையப் பல காரணிகள் நமது கட்டுப்பாட்டிலேயே இல்லை..
உலக பொருளாதாரம்
உலகப் பொருளாதாரத்தின் நிலை இதில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், நாம் தொடர்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கடந்த 1.5 ஆண்டுகளாக கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பிற்குப் பிறகு இப்போது தான் பொருளாதாரம் மெல்ல அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. கடந்தாண்டு பட்ஜெட்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நான் முதல்வன் போன்ற திட்டங்கள் அதன் தொடர்ச்சியாகவே தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த காலம்
கடந்த 2006 முதல் 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு பொருளாதாரம் மிக சிறப்பாக வளர்ந்தது. இருப்பினும், அதன் பிறகு 2011 முதல் 2022 வரை தமிழ்நாட்டின் ஜிடிபி வெகுவாக குறைந்தது. 2011இல் 23.7%ஆக இருந்த மாநிலத்தின் ஜிடிபி 2020 தொடக்கத்தில் 11.5 சதவீதமாகக் குறைந்தது. அதிமுக ஆட்சிய என்பதைத் தாண்டி... அரசியலுக்கு அப்பாற்பட்டும் கூட பல காரணங்களால் தான் இந்த பொருளாதாரம் குறைந்துள்ளது.
பட்ஜெட்
கடந்த ஆண்டு பட்ஜெட்டிற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்தாண்டு அதுபோல பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது. நமது மாநிலம் வளர்ச்சி அடைய புதிய வழிகளை நாம் தேட வேண்டியதே இன்றைய வேலை.. இதுபோன்ற கருத்தரங்கங்கள் அதற்கு முக்கியமானதாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு சில வாரங்களில் தமிழ்நாடு பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.