"தமிழர்கள் இந்துக்களே இல்லை..!" விவாதத்தை கிளப்பிய பொன்னியின் செல்வன்! வந்து விழும் பரபர கருத்துகள்
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து ராஜராஜன் குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், ட்விட்டரில் இப்போது புதிய ஹேஷ்டேக் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளாகப் பலர் முயன்று முடியாததை இப்போது மணிரத்தினம் சாதித்து உள்ளார். விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பொன்னியின் செல்வன் வெளியாகி உள்ளது.
5 பாகங்களாக உள்ள நவாலை இரண்டு பாகங்களாக மணிரத்தினம் எடுத்து உள்ளார். அதில் முதல் பாதிதான் இப்போது வெளியாகி ஹிட் அடித்து உள்ளது.
பொன்னியின் செல்வன் மெகா ஹிட்! ஆனால் உண்மை வரலாறு அதுவல்ல.. இதெல்லாமே பொய்தானா.. புதிய தகவல்கள்
பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் ஓடும் திரையரங்குகளை மக்கள் குடும்பம் குடும்பமாகப் படையெடுத்து வருகின்றனர். அதேநேரம் சினிமாவுக்கு வெளியேயும் பொன்னியின் செல்வன் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. ராஜராஜ சோழன் குறித்து விவாதம் படத்தைத் தாண்டியும் பேசப்பட்டு வருகிறது. இதை அனைத்தையும் தொடங்கி வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன்.. சமீபத்தில் நடைபெற்ற விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
வெற்றிமாறன்
அப்போது பேசிய அவர், "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதை நாம் சரியாகக் கையாள வேண்டும். இல்லையென்றால் கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது" என்று கூறி இருந்தார்.
பதிலடி
இது பெரும் விவாதத்தையே கிளப்பி உள்ளது. வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவாகச் சிலரும் எதிராகச் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவின் ஹெச்.ராஜா, " "சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்" என்று காட்டமாக எதிர்வினையாற்றி இருந்தார். வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இதைக் கருத்தைக் கூறி உள்ளனர்.
ஆதரவு
அதேநேரம் வெற்றிமாறனுக்கு ஆதரவாக கருணாஸ் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். "தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை இந்தி, சமற்கிருத, காவி அடையாளங்களாக மற்றும் ஆரிய நுண்ணரசியல் பலகாலம் தொட்டு நடந்தேறுகிறது. இது இப்போது வேகமாக நடப்பதாக" என்று கருணாஸ் கூறி இருந்தார். சீமான், தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அப்படியே கூறி இருந்தனர்.
ஹேஷ்டேக்
இந்தச் சூழலில் இப்போது இணையத்திலும் கூட இது விவாதமாகக் கிளம்பி உள்ளது. #TamilsAreNotHindus என்ற ஹேஷ்டேக் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டிசன் ஒருவர், "இது தமிழ்நாடு - தமிழர்களின் பூமி! இது வலிமைமிக்க ராவணனின் தேசம்! உங்கள் புராணங்களை இங்கு எடுத்து வர வேண்டாம். ஏனென்றால்.. இது ராவணன் பூமி" என்று பதிவிட்டு வருகிறார்.
ராவணன்
அதேபோல வரலாற்று ரீதியாகத் தமிழர்கள் என்றும் இந்துக்களாக இருந்ததில்லை என்றும் தமிழ் கலாசாரமாக தனி மதம் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர். தமிழர்களுக்கு மதங்களைத் தாண்டி தனி கலாசாரம் உள்ளதாகவும் ட்வீட் செய்து வருகின்றனர். மேலும், வர்ண அமைப்பு, உயர் சாதி, தாழ்ந்த சாதி, மனுஸ்மிருதி, வேதங்கள், தீண்டாமையை ஏற்பதே இந்து மதம் என்றும் அதைத் தமிழர்கள் ஏற்பதில்லை என்றும் சிலர் ட்வீட் செய்து வருகின்றனர்.
விளக்கம்
மேலும் சிலர், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்றே ஒன்று இல்லை என்றும் அப்போது வைணவம், சமயம் என்றே மதங்கள் இருந்தது என்றும் அதைத்ததன் வெற்றிமாறன் கூறியதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இன்று காலை முதலே இந்த #TamilsAreNotHindus தேசிய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. அதேநேரம் அனைவரும் இந்த ஹேஷ்டேக்கிற்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிடவில்லை.
எதிர்ப்பு
சிலர் சிவன் கோயிலைக் கட்டிய ராஜராஜனை இந்து இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும் என்று பதிவிட்டு வருகின்றனர். காலை முதலே ட்விட்டர் தளத்தில் இந்த பஞ்சாயத்து தான் டிரெண்டிங். பொன்னியின் செல்வன் திரையரங்குகளைத் தாண்டி விவாதத்தைக் கிளப்பி உள்ளது என்றே சொல்லலாம்.