பரபரத்த எய்ம்ஸ் வளாகம்.. "ஊசி போட்டாச்சா.. வலிக்கவேயில்லை.." செவிலியரிடம் சொன்ன மோடி
சென்னை: தடுப்பூசி போடும்போது "வலியே தெரியவில்லை" என்று செவிலியரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி மாதம் துவங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில் இரண்டாவது கட்ட தடுப்பூசி பணிகள் இன்று முதல் துவங்கியுள்ளனர்.
அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி- தகுதியானவர்கள் போட்டுக்கொள்ள அழைப்பு
காலையிலேயே தடுப்பூசி போட்ட மோடி
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். காலை 9 மணிக்கு தடுப்பூசி முன்பதிவு ஆரம்பித்த நிலையில் மக்களுக்கு தன்னால் இடைஞ்சல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் காலையிலேயே சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடிக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட பிறகு அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எய்ம்ஸ் மருத்துவமனையில் covid-19 தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நமது மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் உலகம் முழுக்க பரவியுள்ள ஒரு தொற்று நோய்க்கு எதிராக எவ்வளவு சிறப்பாக குறுகிய காலத்தில் பணியாற்றி உள்ளார்கள் என்பது வியக்கத்தக்கதாக இருக்கிறது. தகுதி உடைய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். covid-19 இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தார்.
3 வருட அனுபவம்
இந்த நிலையில்தான் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்திய செவிலியரிடம் நிருபர்கள் சிலர் பேட்டி கண்டனர். அந்த செவிலியர் பெயர் நிவேதா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மூன்று வருடங்களாக பணியாற்றி வருகிறார். "பிரதமர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருகிறார் என்பது காலையில்தான் எங்களுக்கே தெரியும். அந்த தடுப்பூசியை நீங்கள்தான் செலுத்த வேண்டும் என்று எனக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமரை அருகே இருந்து பார்க்கக்கூடிய ஒரு சிறப்பான வாய்ப்புக் கிடைக்கப் போவதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்." என்று சிலிர்ப்போடு கூறுகிறார் நிவேதா.
ஊசி போட்டாச்சா
"பிரதமருக்கு நான் தடுப்பூசி செலுத்தியதும், அவர் என்னை பார்த்து "ஊசி போட்டு விட்டீர்களா, எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே..." என்று வியப்பாக கேட்டார். நீங்க எந்த ஊர் என்று கேட்டார், நான் புதுச்சேரி என்றதும், 'வணக்கம்' என்று தமிழில் சொன்னார். மேலும், கால்நடை ஆஸ்பத்திரி ஊசியை எடுத்து வந்தீர்களா, இவ்வளவு பெரிதாக இருக்கிறதே என ஜோக் அடித்தார். பிரதமர் இருப்பதால் ஏற்பட்ட பரபரப்பு மறைந்து அவர் அடித்த ஜோக்கால் சிரித்துவிட்டோம். இவ்வாறு நிவேதா பூரிப்புடன் தெரிவித்தார். இந்த பணியில் உடன் இருந்த மற்றொரு செவிலியர் ரோசம்மா அனில். கேரள மாநிலத்தை சேர்ந்தவர். அவர் கூறுகையில், பிரதமர் மிகவும் இயல்பாக இருந்தார். எனவே எங்களுக்கு எந்த ஒரு பதட்டமும் ஏற்படவில்லை என்று பூரிப்போடு தெரிவித்துள்ளார்.
மோடி தடுப்பூசி
பிரதமர் நரேந்திர மோடி செலுத்திக் கொண்டது பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசி ஆகும். மூன்றாவது கட்ட ஆய்வுகள் நடைபெறும்போது இந்த மருந்துக்கு அனுமதி வழங்கி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அந்த தடுப்பூசியை தனக்கு செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி.