"ஒன்றிணைவோம்.." மவுனம் கலைத்து பேசிய சசிகலா.. பின்னணியில் செம பிளான்!
சென்னை: மீண்டும் ஒருமுறை, "ஒன்றிணைந்து தேர்தலை சந்திப்போம்" என்று கூறியுள்ளார் சசிகலா. இத்தனை நாள் மவுனத்திற்கு பிறகு அவர் பேசிய இந்த பேச்சு, இது தமிழக அரசியலில் பரபரப்புக்கு காரணமாகியுள்ளது.
Recommended Video
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிமுக தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே நேரம், சென்னை தி.நகர் இல்லத்தில், ஓய்வு எடுத்து வரும் சசிகலா என்ன சொல்லப்போகிறாரோ, அடுத்த ஆக்ஷன் என்னவாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஜெ. நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி செலுத்துவாரா என்ற கேள்விகள் இருந்தன.
சசிகலா அஞ்சலி
ஆனால், இது எதையும் செய்யவில்லை சசிகலா. ஆனால், சிம்பிளாக ஒரு காய் நகர்த்தலை முன் வைத்தார். தி.நகரிலுள்ள தனது இல்லத்தில் ஜெயலலிலதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் அவர். அப்போது டிடிவி தினகரன், சி.ஆர்.சரஸ்வதி போன்றோரும் உடனிருந்தனர்.
இதன்பிறகு மைக் பிடித்து சில வார்த்தைகள் பேசினார். அதில் முக்கியமான கருத்து ஒன்றும் இருந்தது.
உடன்பிறப்புகள்
"ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். 100 வருட காலம் கட்சி அழியாமல் இருக்கும் என்றார் ஜெயலலிதா. எனவே இதுதான் அவருக்கு நாம் செய்யும் மரியாதை.." இவ்வாறு சசிகலா பேசிவிட்டு உரையை முடித்துக் கொண்டார்.
ஒன்றிணைந்து சந்திக்க அழைப்பு
"ஒன்றிணைந்து.." என்று கூறிய சசிகலா, அமமுக என்ற வார்த்தையை மறந்தும் உச்சரிக்கவில்லை. அவர் அதிமுக தொண்டர்களுக்கு ஆற்றிய உரையாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இவ்வாறு அவர் அதிமுகவுடன் இணைந்து பயணிக்க விருப்பம் தெரிவிப்பது இது முதல் முறை இல்லை. பெங்களூரிலிருந்து வாகனத்தில் சென்னை வந்தபோது வேலூர் அருகே மைக் பிடித்து பேசினார் சசிகலா. அப்போதும் இணைந்து செயலாற்றுவோம். எதிரியை வீழ்த்துவோம் என்றார்.
சசிகலா வியூகம்
ஜெயலலிதா பிறந்த நாள் தினத்தில் மீண்டும் அதேபோல அதிமுகவுடன் இணைந்து செல்ல சசிகலா விருப்பம் தெரிவித்துள்ளதன் பின்னணியில் ஒரு காய் நகர்த்தல் இருக்கிறதாம். அதிமுகவிலுள்ள சில சசிகலா அனுதாபிகளை, அவரை கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமைக்கு கோரிக்கை விடுக்க வைக்கும் வியூகம்தான் இது என்கிறார்கள். குறிப்பாக, சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததுமே சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுக்க சில நிர்வாகிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்களை நோக்கி இந்த உரையை முன் வைத்ததாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு சாதகமாவிட கூடாது
இதில், இன்னொரு திட்டமும் இருக்கிறதாம். அதாவது தேர்தலில் அமமுக களமிறங்கினால் ஓட்டுக்கள் பிரிந்து அதிமுகவுக்கு பாதமாகவும், திமுகவுக்கு சாதகமாவிடுமே என்ற அச்சம் கணிசமான அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருக்கிறது. அவர்களும் சசிகலா அதிமுகவில் இணைய விரும்புகிறார்கள். அவர்களுக்கான கோரிக்கைதான் சசிகலாவின் இந்த பேச்சு.
சசிகலா வாதம்
ஒருவேளை அதிமுகவில் சசிகலாவை சேர்க்காவிட்டால், அமமுக மூலம் வாக்குகள் பிரிந்தால், "நான்தான் அப்பவே கோரிக்கை விடுத்தேனே. நீங்கள் ஏற்காததால் திமுகவுக்கு சாதகமாகிவிட்டது" என்று சசிகலா சொல்ல அது ஒரு காரணமாகிவிடும். ஜெயலலிதாவின் கட்சியை எதிர்ப்பது எனது விருப்பம் இல்லை. இணைந்து செல்லவே விரும்பினேன். அவர்கள்தான் ஏற்கவில்லை என்ற வாதத்தை சசிகலா முன்வைக்க இது வசதியாகிவிடும்.
சசிகலா சுற்றுப் பயணம்
தேர்தலுக்கு பிறகு இது சசிகலாவுக்கு அனுதாபத்தை தேடித் தர உதவக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். "பொது எதிரி திமுகதான்" என்று சொல்வதன் மூலம், சசிகலா தன்னை ஒரு பக்கா அதிமுகக்காரர் என்பதாகவே முன்னிறுத்துகிறார். இது முதல் கட்டம்தான். அடுத்த கட்ட மூவ்களை தேர்தல் தேதி நெருங்கும்போது எடுத்து வைப்பார். மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து, "நான் இணைய விரும்பியும் அதிமுகவில் என்னை சேர்க்காமல் புறம்தள்ளிவிட்டனர்" என்று பிரச்சாரம் செய்யவும் வாய்ப்பு உள்ளது. விரைவில் மக்களை சந்திக்க வருவேன் என அவர் இன்று கூறிய கருத்து இதற்கு வலு சேர்க்கிறது. இதற்கெல்லாம் அடித்தளம்தான் இன்றைய பேச்சு என்கிறார்கள்.