சிஏஏவுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. பக்கா சிக்கலில் அதிமுக... என்ன செய்யும் தமிழக அரசு?
Recommended Video
சென்னை: குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபடி இருக்கிறது. சென்னையில் துவங்கிய இந்த போராட்டம், இப்போது மதுரை உள்ளிட்ட பகுதிகளில், பரவியுள்ளது.
வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்தியதன் விளைவாக அன்று இரவே போராட்டம் மதுரை, திருப்பூர், தேனி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பரவியது. இரவே போராட்டம் வாபஸ் பெறப்பட்டபோதிலும், வண்ணாரப்பேட்டையில், தர்ணா என்ற அளவில் போராட்டம் தொடர்ந்தபடிதான் உள்ளது.
அங்கு தினமும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டம் திருத்தம் மனித குலத்திற்கு எதிரானது: சீமான் சீற்றம்
மதுரை, கடலூர்
இதேபோலத்தான் மதுரையிலும், இரவு பகலாக இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த நூற்றுக் கணக்கானோரால், குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அங்கேயே உணவு சாப்பிட்டு அவர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். கடலூரில், கடையடைப்பு போராட்டத்தை இன்று இஸ்லாமியர்கள் முன்னெடுத்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டம் போல இது மாறி வருகிறது என்கிறார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், அருணன்.
அழுத்தம்
இப்படியான ஒரு சூழலில் தமிழக அரசுக்கு தினமும் அழுத்தம் அதிகரித்தபடி உள்ளது. அடுத்து அரசு என்ன செய்ய முடியும், என்ன செய்யும் என்பது பற்றி மூத்த பத்திரிக்கையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் போன்றோரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவர்கள் கூறிய தகவல் இதுதான்: இந்த போராட்டம், அதிமுக அரசை ஒரு முட்டுச் சந்தில் கொண்டு சென்றுதான் விட்டுள்ளது. அவர்கள் பின்னாலும் வர முடியாது, வேறு பக்கமும் போக முடியாத நிலைதான் இருக்கிறது.
பாஜக கூட்டணி
போராட்டக்காரர்கள் கோரிக்கையை ஏற்று, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினால், அவர்கள் கூட்டணியில் உள்ள பாஜகவை பகைத்தது போல ஆகிவிடும். எனவே அதிமுக அரசு அதைச் செய்யாது. அதேநேரம், இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம், நீங்கள் பயப்பட வேண்டாம், என்று தொடர்ந்து முஸ்லீம் அமைப்புகளை சமாதானப்படுத்ததான் நினைப்பார்கள். ஒருவகையில் அது உண்மைதான். இதுபோன்ற சட்டத்தை வலிந்து அதிமுக அரசு செயல்படுத்தாது. முஸ்லீம்கள் வாக்குகள் அவர்களுக்கு மிக முக்கியம். ஆனால் அதை வெளிப்படையாகவும் சொல்ல முடியாது.
சட்டசபை தேர்தல்
சொல்லவும் முடியாமல், மெல்லமும் முடியாத நிலை என்பார்களே, அப்படித்தான், அதிமுக அரசு முட்டுச் சந்தில் சிக்கிக்கொள்ளும். இது திமுகவுக்குதான் சாதகம். தொடர்ந்து, இதே கோரிக்கையை திமுக வலியுறுத்தி, அழுத்தத்தை அதிகரிப்பார்கள். ஒருவேளை சட்டசபை தேர்தல் நெருங்கும்போது, அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் வந்தால், அப்போது வேண்டுமானால், சட்டசபையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு முன்வரும். இவ்வாறு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நிர்பந்தம்
தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருவதால், பேரவையில், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வைக்க இதுதான் நல்ல தருணம் என்ற முனைப்பில் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளன. ஒருவேளை நிர்பந்தம் அதிகரித்தால், அதிக வலு இல்லாத ஒரு தீர்மானத்தையும், அரசு, நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது என்று, சில அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.