மூளையில் ரத்த கசிவு, மூச்சு திணறல்.. கடைசி நேரத்தில் எஸ்பிபிக்கு நேர்ந்தது என்ன? டாக்டர்கள் விளக்கம்
சென்னை: பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து, பரவும் வதந்திகள் குறித்து எஸ்.பி.பி சரண் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
மேலும், எஸ்பிபி உடல்நிலையில் கடைசியில் ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன என்பது குறித்து, மருத்துவமனை டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
கொரோனா நோய் தொற்று பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எஸ்பி பாலசுப்ரமணியம் சுமார் 50 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
எஸ்பிபி சிகிச்சைக்கான பில் தொகை பற்றி பேசவே வேண்டாம் என்று மருத்துவமனை கூறிவிட்டது.. சரண் விளக்கம்
திடீர் மரணம்
பாலசுப்பிரமணியம் உடல்நிலை தேறி வருவதாக அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில், திடீரென உடல்நிலை மோசமடைந்ததும், அதையடுத்து அவர் மரணமடைந்த தகவலும், ரசிகர்களை உலுக்கின.
பில் தொகை
இதனிடையே, நிலுவை பில் தொகையை கொடுத்தால்தான், பாலசுப்பிரமணியம் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என எம்ஜிஎம் மருத்துவமனை கூறியதாகவும், துணை குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு பாலசுப்பிரமணியம் மகன் சரண் உதவி கோரியதாகவும், சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
சரண் விளக்கம்
இந்த சர்ச்சைகளுக்கு இன்று சரண் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். மேலும், மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து பேட்டியும் கொடுத்தார்.
இந்த பேட்டியின்போது, சிகிச்சையின் கடைசி தருணங்களில் என்ன நடந்தது என்பது குறித்து, சரணுடன் இணைந்து எம்ஜிஎம் மருத்துவமனை டாக்டர்கள் பேட்டியளித்தனர்.
கடைசி நிமிடங்கள்
அப்போது அவர்கள் கூறுகையில், எஸ்பிபி மரணத்திற்கு 48 மணி நேரம் முன்பிருந்து அவரது நிலைமை மிகவும் மோசமடையத் தொடங்கியது. எஸ்பிபி மூளையில் ரத்தம் கசியத் தொடங்கியது. அவருக்கு கடைசி 48 மணி நேரத்தில் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் பலனளிக்கவில்லை. எனவே, அவருக்கு மூச்சு திணறலும், மாரடைப்பும் ஏற்பட்டு உயிர் பிரிந்தது. இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.