திருப்பூருக்கு வர்றது இருக்கட்டும்.. என்ன பேசப் போகிறார் மோடி.. எதிர்பார்ப்பில் மக்கள்
சென்னை: திருப்பூருக்கு பிரதமர் மோடி வருவதை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால் மோடி என்ன பேசப் போகிறார் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த மாதம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மோடி வரும் முன்னரே மிகபெரிய திருப்பம் ஏற்பட்டுவிடும். கூட்டணிகள் எல்லாம் முடிவாகிவிடும் என்று பாஜகவினர் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தினர். ஆனால் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய அவர் கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுவிட்டு திரும்பச் சென்று விட்டார்.
கூட்டணி குறித்து எந்த வித அறிவிப்புகளும் வரவில்லை. அதற்கு பாஜகவினர் பிரதமர் வரும் அன்றே கூட்டணி குறித்த அறிவிப்புகள் வரும் என்று கூறவில்லை மாறாக வந்த பின்பு பெரிய மாற்றம் இருக்கும் என்றனர். ஆனால் அவர் மறுபடி இன்று திருப்பூருக்கு வரவிருக்கிறார் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனாலும் சளைக்காத பாஜகவினர் இம்முறை மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற கோஷத்துடன் திருப்பூர் திருப்பத்தை தரும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மோடி மதுரையில் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி கிடக்க இந்த கேள்விகளுக்கு எல்லாம் மோடி திருப்பூரில் பதில் கூறுவாரா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதை தெளிவுபடுத்துவாரா மோடி
மதுரை மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உண்மையில் அடிக்கல் நாட்டியது யார் மோடியா அல்லது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியா? இந்த கேள்விக்கு மோடி பதில் அளிக்க வேண்டும் என்று மக்கள் எண்ணுகின்றனர். ஏன் எனில் மதுரையில் மோடி அடிக்கல் நாட்டிவிட்டு சென்றதுமே பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உண்மையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது தான்தான் என்று புகைப்பட ஆதாரத்தோடு டிவிட்டரில் பதிவு ஒன்று வெளியிடுகிறார். இதற்கு பாஜக இதுவரை பதிலோ மறுப்போ கூறவில்லை.
அடிக்கல் நாட்டியது யார்
ஜி எஸ் டி குறித்து நடிகர் விஜயின் திரைப்படத்தில் ஒரு தகவல் வெளியானதற்காக தமிழகம் முழுவதும் தியேட்டர்களை முற்றுகையிட்டு அந்த படத்திற்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுத்த பாஜகவினர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது யார் என்பதற்கான விளக்கத்தை ஏன் கொடுக்கவில்லை என்ற மில்லியன் டாலர் கேள்வி இன்னும் விடை காணப் படாமலே உள்ளது. ஆகவே மோடி இதற்கு பதில் கூறவேண்டும் என்று வாக்காளர்களாகிய மக்கள் எதிர்பார்க்கின்றனர். செய்வாரா மோடி?
தொழில் நசிவு
திருப்பூர், கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மாவட்டத்தில் ஜி எஸ் டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு நலிந்த தொழில்கள் ஏராளம், ஏராளம் தொழிலை விட்டுவிட்டு இன்று வேறு மாவட்டங்களில் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கும் சிறு குறு தொழில் அதிபர்கள் ஏராளம் ஏராளம், இவர்களுக்கு மோடி என்ன பதில் கூறுவார். அதோடு கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கையில் IGST மூலமாக தமிழகத்திற்கு மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகை 5400கோடிகள் என்றும் GST மூலமாக 450 கோடிகள் என்றும் துணை முதலமைச்சரும் தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தமிழக சட்டமன்ற வரலாற்றில் பதிந்து போன தகவல். இதற்கு மோடி பதில் கூறவேண்டும் என்று வாக்காளார்களான தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் செய்வாரா மோடி?
துணை முதல்வருக்குப் பதில்
ஜெயலலிதா மிகக் கடுமையாக எதிர்த்த ஒரு திட்டம் உதய் மின் திட்டம். ஆனால் அவரது மறைவிற்கு பிறகு இந்த திட்டத்தில் அம்மாவின் வழியில் நடைபோடும் அரசு இணைந்தது. தமிழகத்தின் நிதி நிலை சரிவிற்கு இந்த உதய் மின் திட்டமும் ஒரு காரணம் என்று துணை முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையின்போது சட்டமன்றத்தில் கூறினார். இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் கூறப் போகிறார் என்று வாக்காளர்களாகிய தமிழக மக்கள் வெகு ஆவலோடு காத்திருக்கிறார்கள் பதில் கூறுவாரா மோடி?
7 தமிழர் குறித்து பேசுவாரா
இத்தனை ஆண்டுகளாக வழக்கு, சட்டப் போராட்டம் என்றெல்லாம் சிறையில் இருக்கும் 7 தமிழர்களின் வாழ்வு சின்னாபின்னமாகிவிட்டது இப்போது தமிழக அரசே முடிவு செய்து விடலாம் என்று நீதிமன்றம் கூறியும் பாஜகவை சேர்ந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முடிவே எடுக்காமல் காலம் கடத்துவது ஏன் என்று பிரதமர் மோடி திருப்போர் கூட்டத்தில் பதில் கூற வேண்டும் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் செய்வாரா மோடி .
இவையெல்லாவற்றையும் தாண்டி பாஜகவினர் எதிர்பார்ப்பது போல குறைந்த பட்சம் கூட்டணி பற்றிய அறிவிப்புகளையாவது மோடி வெளியிடுவாரா?.. அது மில்லியன் டாலர் கேள்வி.