அரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா.. அதிருப்தியில் டிடிவி தினகரன்.. அடுத்தகட்ட திட்டம் என்ன?
சென்னை: சசிகலா தான் அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ளது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு மிகப் பெரியளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. சுமார் 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் மிக நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா உயிரிழப்பதற்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போதும் அவருடன் இருந்து பார்த்துக்கொண்டவர் சசிகலா.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அப்போது சரியாகச் சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பும் வந்ததால், சசிகலா சிறைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
அரசியலை விட்டு விலகுகிறேன்.. "அம்மா"வின் ஆட்சி தொடர பாடுபடுங்கள்.. சசிகலா திடீர் அறிவிப்பு
சசிகலா வருகை
இதனால் கடந்த நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்த சசிகலா, கடந்த சில வாரங்களுக்கு முன் விடுதலை செய்யப்பட்டார். அப்போது சில நாட்கள் கர்நாடகாவில் ஓய்வு எடுத்துவிட்டு தமிழகம் திரும்பியபோது அவருக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுவும் குறிப்பாக, அவர் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரிலேயே திரும்பியது தமிழக அரசியலில் மிகப் பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியது.
அமைதி
அவரது வருகை தமிழக அரசியலையே புரட்டி போடும் என்றும் இந்தத் தேர்தலின் கேம் சேன்ஜராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவர் தமிழகத்திற்கு திரும்பியதிலிருந்தே அமைதியாகவே இருந்தார். தற்போது சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகலும் தீவிர அரசியலில் ஈடுபட தொடங்கினால் அது திமுகவுக்குச் சாதகமாக அமைந்துவிடும் என்பதாலும் சசிகலா எவ்வித தீவிர அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமலேயே இருந்தார்.
அரசியலைவிட்டு ஒதுங்கிய சசிகலா
இந்நிலையில், தான் அரசியலைவிட்டே ஒதுங்குவதாக சசிகலா இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தான் என்றும் பதவிக்கோ பட்டத்திற்கோ ஆசைப்பட்டதில்லை என்றும் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையப் பிரார்த்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பொது எதிரி திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமையப் பாடுபட வேண்டும் என்றும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
திடீர் முடிவு
சசிகலாவின் இந்த முடிவு அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்யாமல் போனாலும் கொஞ்ச காலம் மட்டும் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கியிருப்பார் என்றும் அதன் பின்னர் மீண்டும் அரசியலில் நுழைவார் என்றுமே பலரும் எதிர்பார்த்திருந்தனர். இந்தச் சூழ்நிலையில் தான் சசிகலாவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
பொதுச்செயலாளர்
சிறையிலிருந்து வெளிவந்தது முதல் சசிகலா வெளியிடும் அறிக்கைகளில் அவரது அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றே இடம் பெற்றிருக்கும். ஆனால், இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'அன்புடன் சசிகலா' என்று மட்டுமே இருந்தது. அதாவது, அதிமுகவின் பொதுச் செயலாளர் தான் என்பதில் அவரது முடிவு மாறியுள்ளது. இது அமமுக துணை பொதச்செயலார் டிடிவி தினகரனுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிருப்தி
இது செய்தியாளர் அவரது செய்தியாளர் சந்திப்பிலேயே தெரிந்தது. எப்போதும், செய்தியாளர்களின் கேள்விகளைச் சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும் அவர், கடுகடுத்த முகத்துடனேயே செய்தியாளர்களிடம் பேசினார். சசிகலாவின் அறிக்கை குறித்த கேள்விகளுக்கும்கூட, 'எனக்குத் தெரியாது அவங்களிடம் தான் நீங்க கேட்கனும்' என தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.
இடியாப்ப சிக்கல்
பொது எதிரியான வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுகவினர் ஒன்று கூட வேண்டும் என்று சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இனிமேல் அதிமுக ஆட்சியைப் பற்றி டிடிவி தினகரன் விமர்சித்தால் அது சசிகலாவின் முடிவுக்கு எதிரானதாகக் கருதப்படும். இதனால் இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளார் டிடிவி தினகரன். செய்தியாளர் சந்திப்பில் அமமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அடுத்தகட்ட முடிவு
சசிகலாவின் முடிவுக்கு எதிராக டிடிவி தினகரன் செயல்பட வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதால் அவர் அதிமுகவுடன் சுமுகமாகச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. அமமுகவை கலைத்துவிட்டு அதிமுகவுடன் இணைவது, தனிக்கட்சியாகவே இருந்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்வது என இரு வாய்ப்புகள் மட்டுமே இப்போது டிடிவி முன்னாள் இருக்கிறது. தேர்தலுக்கும் இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் டிடிவி தனது இறுதி முடிவை எடுக்க வேண்டும். அதேநேரம் மூன்றாவது ஆப்ஷனாக சட்டமன்ற தேர்தலையே முற்றிலுமாக புறக்கணிக்கும் முடிவைக்கூட டிடிவி தினகரன் எடுக்கலாம்.