9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்தல் சவாலான பணி.. ஆனால் சாத்தியமே!.. என்ன நடக்கும்?.. நிபுணர்கள் கருத்து
சென்னை: ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பது என்பது சவாலான பணியாக இருக்கும் என மின் உற்பத்தி செய்யும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்யும் இடங்களில் மின் விளக்குகளை அணைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
இந்த 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைக்கும்போது எந்தவித சிக்கலும் ஏற்படாதபடி அந்தந்த மாநில மின்வாரியங்கள் தயார் நிலையில் உள்ளன. 9 நிமிடம் வீட்டில் உள்ள விளக்குகளை அணைப்பதற்கு ஏன் தயார் நிலையில் இருக்கிறார்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது.
இந்தியர்கள்
ஒரே நேரத்தில் 130 கோடி இந்தியர்களும் மின் விளக்குகளை அணைத்துவிட்டு அவற்றை மீண்டும் 10ஆவது நிமிடத்தில் ஒளிரச் செய்வது என்பது சிக்கலான காரியம். இது குறித்து மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நிபுணர்கள் கூறுகையில் நாட்டு மக்கள் அனைவரும் 9 நிமிடங்களுக்கு ஒரே நேரத்தில் விளக்கை அணைப்பது என்பது தோராயமாக மின் விநியோக அமைப்பில் 15 முதல் 20 சதவீதம் லோடை நிறுத்துவது ஆகும்.
மின்சாரம்
இதனால் மின் விநியோக அமைப்பில் நிலையற்றத் தன்மை ஏற்படுவதுடன் அமைப்பே சரிவை சந்திக்கும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கடந்த ஜூலை 2012 ஆம் ஆண்டு இது போல் மின் விளக்குகளை அனைவரும் ஒரே நேரத்தில் அணைத்து வைத்ததால் மின் உற்பத்தி அமைப்பு பாதிக்கப்பட்டு அதை சரி செய்யவே 2 முதல் 3 நாட்கள் ஆகிவிட்டது. 600 மில்லியன் பேருக்கு மீண்டும் மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டுவிட்டது.
காரை பிரேக் பிடித்தல்
அந்த நிலை தற்போது ஏற்பட்டுவிடுமோ என சிலர் அச்சம் கொள்கின்றனர். ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைப்பது என்பது ஒரு காரை திடீரென பிரேக் பிடித்து நிறுத்துவது போன்றதாகும். அல்லது திடீரென அதன் வேகத்தை அதிகப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. இந்தியாவில் மின் விநியோகம் என்பது 96 நேரத் தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு விநியோகம் நடக்கிறது.
பராமரித்தல் அவசியம்
இதில் இடையில் 9 நிமிடம் மட்டும் விநியோகம் நிறுத்துவதை கையாள்வது கடினமான பணியாகும். எனினும் இதை திட்டமிடுதலுடன் செய்து மக்களுக்கு எந்த வித சிக்கலும் ஏற்படாமல் இந்த பணியை செய்ய முடியும். மின்சாரங்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் போது மின்னலைகளுக்கான அதிர்வெண்ணை 48.5 ஹெர்ட்ஸ் முதல் 51.5 ஹெர்ட்ஸ் வரை பராமரிப்பது அவசியமாகும்.
மின்சாரம்
ஒரு வேளை மின்விநியோகம் மிகக் குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ பயன்படுத்தினால் மின் தடை ஏற்பட வழிவகுக்கும். எனவே சரியான திட்டமிடுதலுடன் மின் விநியோகத்தை செய்தால் எந்த பிரச்சினையும் வராது. மின் உற்பத்தி நிறுவனங்களான டாடா பவர், என்டிபிசியிடம் இருந்துதான் வீடுகளுக்கு மின் விநியோகம் கிடைக்கிறது. அவ்வாறு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த மாநில மின் விநியோக மையங்கள்தான் (எஸ்எல்டிசி) விநியோகம் செய்கின்றன.
விமானம்
இந்த மையங்கள்தான் விநியோகத்தையும் மின் பற்றாக்குறையையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது உதாரணமாக உங்களிடம் விமானம், விமான நிலையம், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் ஆகியன இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இவற்றில் விமான கட்டுப்பாட்டு மையத்தின் பணி என்னவெனில் விமானம் புறப்படுவதிலிருந்து அது எந்த வித தாமதமுமின்றி சரியாக தரையிறங்குதல் வரை ஆகும். கிட்டதட்ட விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் போல் எஸ்எல்டிசி செயல்படுகிறது. எனவே எஸ்எல்டிசியின் துணையுடன் இன்று 9 நிமிட மின் விளக்குகளை அணைத்தல் சவால் செவ்வனே முடிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.