நாளை காலை 10.56.. அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு எப்படி இருக்கும்? என்ன நடக்கும்? பரபர தகவல்கள்
சென்னை: அதிமுக கூட்டணிக்கான, முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி நாளை, அதாவது அக்டோபர் 7ஆம் தேதி காலை அறிவிக்கப்படுகிறது. அந்த அறிவிப்பு எப்படி வெளியாகும் என்பது பற்றி தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றிய வாத, விவாதங்கள் அதிகரித்தன. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளர்கள், தங்கள் தலைவர் தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர் அடித்து ஒட்டி கொண்டதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
அதிலும், கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கும், பன்னீர்செல்வம் வீட்டுக்கும் அமைச்சர்கள் பலரும் காரில் விரைந்து, விரைந்து சென்று மூன்று கட்டமாக ஆலோசனை நடத்தி உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தினர்.
சீரியசாகவே திண்டுக்கல் சீனிவாசனை முதல்வர் வேட்பாளராக்கலாமே...ஒரு தொண்டர் சொல்லும் அடேங்கப்பா காரணம்!
முதல்வர் வேட்பாளர்
இந்த நிலையில்தான், கடந்த 28ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தின் போது, வரும் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. திடீரென முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு தேதி குறிக்கப்பட்டது பலராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. எல்லாம் சுமூகமாக முடிந்து விட்டதோ என்று பலரும் எண்ணினர். ஆனால் உண்மை அப்படி இல்லை.
ஓபிஎஸ் திடீர் பயணம்
இந்த அறிவிப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் பங்கேற்கவில்லை. தேனி மாவட்டத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தார் பன்னீர்செல்வம். இந்தநிலையில் நேற்று அவர் சென்னை கிளம்பி வந்துள்ளார்.
அனுமார் கோவிலில் தியானம்
நாகலாபுரம் வரும் வழியில் தனியார் ஹெர்பல் ஆயுர்வேத வைத்திய யோக மைய வளாகத்தில் உள்ள அனுமார் கோவிலில் திடீரென 15 நிமிடம் தியானம் செய்துள்ளார் ஓபிஎஸ். ஹனுமார் பக்தரான பன்னீர்செல்வம், இப்போதைய பரபரப்பான சூழ்நிலையில் மீண்டும் அனுமாரை தஞ்சமடைந்துள்ளனர்.
ஓபிஎஸ் விருப்பம்
கட்சிக்குள் வழிகாட்டு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்பது பன்னீர்செல்வம் விருப்பம். இதன் மூலம் கட்சியில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும் என ஓபிஎஸ் நினைக்கிறார். ஆனால், இதுவரை வெளிப்படையாக வழிகாட்டு குழு அமைப்பது பற்றி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் நாளை, முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதுவும் ஒரு அறிக்கை மூலமாகவோ, அல்லது ஓபிஎஸ் அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக அறிவிப்பு வெளியிடப் போவதில்லை. இருவரும் இணைந்து கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட உள்ளனராம்.
நாளை என்ன நடக்கும்?
முதல்வர் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பது பற்றி அதிமுகவினர் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றி கட்சி வட்டாரங்களிடம் கேட்டபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர்செல்வமும் நாளை காலை வருகை தருவார்கள். இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்துவார்கள்.
முதல்வர் இவர்தான்
பிறகு காலை 10 மணி 56 நிமிடம் என ஏற்கனவே முடிவு செய்த நேரத்தில், இருவரும் இணைந்து முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பார்கள். அனேகமாக, எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பு வெளியாகும். அதே நேரம் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் அப்போது வெளியிடப்படும். இதன்மூலம் இருதரப்பும் சமாதானம் அடைந்து, தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபடுவார்கள். இப்படித்தான் நாளைய முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு இருக்கும். இவ்வாறு அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.