எழுச்சி ஏற்படாவிட்டால் என்ன செய்வார் ரஜினிகாந்த்?
சென்னை: தமிழகத்தில் எழுச்சி ஏற்படாவிட்டால், ரஜினிகாந்த் என்ன செய்வார் என்பதுதான் இப்போது அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ள பெரும் கேள்வியாக மாறியுள்ளது.
Recommended Video
2017ம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒரு முக்கிய தகவலை ரஜினிகாந்த் தெரிவித்தார். தமிழகத்தில் வெற்றிடம் இருப்பதாகவும், எனவே 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.
போருக்கு ரெடியாகுங்கள், போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்களுக்கு அவர் அரைகூவல் விடுத்தார். அவர் போர் என கூறியது, சட்டசபை தேர்தலைத்தான் என அப்போது, கூகுள் டிரான்ஸ்லேட்டர் துணையின்றி, மொழிபெயர்க்கப்பட்டது.. கோனார் உரையின்றி அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
சிஸ்டத்தை சுத்தம் செய்ய முதல் அஸ்திரம்.. பதவிகளுக்கு வேட்டு வைக்கும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் ஷாக்!
இதையேத்தான் அப்பவும்
இதோ.. போருக்கான சங்கநாதம் ஒலிக்கிறது. ஏனெனில் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கிறது. அதனால்தான் ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டி மீது அவ்வளவு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் நடந்தது என்ன? 1995களின் இறுதிகளிலோ, அல்லது 1996ன் துவக்கத்திலோ ஒரு செய்தியாளர் சந்திப்பை ரஜினிகாந்த் நிகழ்த்தினாரே, அதன் ரீப்ளேயாகத்தான் முடிந்து போனது. ஆம்.. அப்போதும் இப்படித்தான். ஜெயலலிதா ஆட்சியை வீழ்த்த, ஆர்.எம்.வீரப்பனுடன் இணைந்து ரஜினி கட்சி துவங்கப்போகிறார் என்றும், அதை அறிவிக்க ஹோட்டலில் பிரஸ் மீட்டுக்கு அழைத்துள்ளார் என்றும், அடித்துபிடித்து ஓடினர் பத்திரிக்கையாளர்கள். "எனக்கு பதவி மீதெல்லாம் ஆசை இல்லைங்க.. எல்லாரும் சாப்பிட்டுட்டுத்தான் போகனும்" என பத்திரிக்கையாளர்களை வழியனுப்பி வைத்தார் ரஜினி. அதேதான் இன்றும் நடந்துள்ளது.
ஐயோ, அம்மா
இன்றைய செய்தியாளர் சந்திப்பில், 2017ல் சொன்ன டோன் சுத்தமாக மாறிப்போனது. "மக்கள் மத்தியில் அரசியல் புரட்சி வர வேண்டும், அப்படி வராவிட்டால் நான் அரசியலுக்கு வந்து என்ன லாபம்? புரட்சி வரட்டும், நான் உடனே வருகிறேன்" என்று சொன்னாரே ஒரு வார்த்தை. லைவாக பேட்டியை பார்த்த 50 வயதுக்கு மேற்பட்ட அவரது பெருவாரியான ரசிகர்கள், பி.பி மாத்திரை தேடிய தருணம் அது. பலரும் நெஞ்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டதாக, உளவுத்துறை தகவலும் உள்ளது.
3 மாற்று அரசியல்
ரஜினிகாந்த் இன்றைய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்த 3 'மாற்று அரசியல்' என்ன? கட்சியின் அடிமட்டத்தில் உள்ள பதவிகளை தேர்தலுக்கு பிறகு கலைத்துவிடுவது, இளைஞர்கள்-படித்தவர்கள் அதிகம் அரசியலுக்கு வருவது அப்புறம் மக்கள் புரட்சி வெடிப்பது. முதலில், பதவிகளை பற்றி பார்ப்போம். இன்று கிராமத்தில் தனக்கு முதியோர் பென்ஷன் ஒழுங்காக வராவிட்டால், ஒரு முதியவரோ, மூதாட்டியோ, யாரை தேடி சென்று தங்கள் குறைகளை சொல்கிறார்கள்? கட்சிக்காரர்களைத்தானே. அது எதிர்க்கட்சியை சேர்ந்தவராகவே இருக்கட்டுமே. அவர்கள்தானே மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாலமாக இருக்கிறார்கள். அவர்களும் இல்லாவிட்டால், சாமானிய மக்கள் எப்படி அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும்? அப்புறம் ஏன் இப்படி ஒரு கொள்கை ரஜினிக்கு. இந்த கொள்கையை மக்கள் ஏன் ஏற்று இவரை அரசியலுக்கு வரவேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.
அது அப்பவே நடந்து போச்சு
இளைஞர்கள்-படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். இது நடந்து முக்கால் நூற்றாண்டு வரப்போவதை, ரஜினிகாந்த் உணர.. முகத்தை கழுவி, கண்ணை கசக்கி, தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தால்தான் உண்டு. திமுக ஆரம்பிக்கப்பட்டபோது அப்படியான இளைஞர்களும், படித்தவர்களும்தான் அதில் சாரை சாரையாக சேர்ந்தனர். பின்னர் அதிமுக உருவானபோதும், அப்படித்தான். இரு கட்சிகளிலுமே, இளைஞர் அணி நல்லபடியாகத்தான் செயல்படுகிறது. அறிஞர் அண்ணா, 1949ம் ஆண்டு, திமுக என கட்சி துவங்கியபோது, அவருக்கு வயது 40ஐக் கடக்கவில்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் இன்ஜினியரிங் படித்து முடித்த கையோடு அரசியலுக்கு வந்தவர். திமுகவில் மாணவர் அணி முழுக்க அப்போது கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது. அப்படி புரட்சி செய்துதான், திமுக 1967ல் முதன் முதலில் ஆட்சிக்கு வந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி துவங்கும்போது திருமாவளவனுக்கு கூட 27 வயதுதான்.
கடல் வற்றட்டும்
படித்தவர்கள் அரசியலுக்கு வந்தால்தான், நான் அரசியலுக்கு வருவேன் என்ற ரஜினிகாந்த்தின் வாதம் எவ்வளவு நகைப்புக்குரியது என்பதற்கு இவை சில உதாரணங்கள். ஆனால், உச்சகட்ட காமெடி என்பது, அரசியல் புரட்சி பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான். கடல் வற்றட்டும்.. நான் மீன் பிடிக்கிறேன்.. என்று சொல்வதற்கு இணையானது இது. புரட்சி என்பது அதுவாக வெடித்து கிளம்புவது. ஜல்லிக்கட்டுக்கு நடந்ததே அது சமகால தமிழக வரலாற்றின் முக்கிய புரட்சி. அதற்கு தலைவர் கூட தேவைப்படாது. ஆனால் புரட்சி வெடிக்கட்டும், அதற்கு நான் தலைமை தாங்க வருவேன் என்பது சாத்தியமா என்பதோடு, அதற்கான அவசியம் இருக்கிறதா என்ற கேள்வியையும் கூடவே கூட்டி வருகிறது.
மலையை தூக்கி வைக்கவும்
இரு பெரும் கட்சிகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. மக்களின் தேவைகளை அந்த கட்சிகள் மூலமாக நிறைவேற்றிக்கொள்கிறார்கள். இதற்கு மேலும் ஏன் புரட்சி பொங்கி வழிய வேண்டும் என்கிறார் ரஜினிகாந்த்? ஆக.. புரட்சி வராது.. நாமும் அரசியலுக்கு வராமல், ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கலாம் என்பதால்தானா? இப்படித்தான், 'நட்புக்காக' என்ற திரைப்படத்தில், வரும் செந்தில் கதாப்பாத்திரம், மலையை தூக்குகிறேன் என்று ஊரிலுள்ள அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி வைப்பார். எல்லோரும் வாயை பிளந்து பார்த்து நிற்கும்போது, சரி.. சரி.. டைம் ஆச்சு.. வந்து மலையை தூக்கி என் கைகளில் வைங்க.. தூக்குகிறேன் என்று கூலாக சொல்வார். அந்த காமெடி சீனை, சீரியசாகவே அப்ளை செய்துள்ளார் ரஜினி. 2021 தேர்தல் நெருங்கும்போது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புரட்சியையே காணோம்.. அப்போ நானும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லப்போகிறார். இது தெரியாமல் ரசிகர்கள், இன்னும் சில்லரையை சிதற விடுவதுதான் வேதனை!