கவனிச்சீங்களா.. அமமுகவில் பிரச்சனை என்றால்.. அதிமுகவுக்கு வராமல் திமுகவுக்கு போறாங்க.. என்ன காரணம்?
அதிமுகவில் உட்கட்சி பூசல் நீடித்து வருவதாக கூறப்படுகிறது
Recommended Video
சென்னை: ஒன்னு கவனிச்சீங்களா.. அமமுகவில் பிரச்சனை என்றால், தாய்க்கழகத்துக்கு வராமல், முக்கிய புள்ளிகள் ஏன் திமுக பக்கம் செல்கிறார்கள்? இதற்கு என்ன காரணம்?
இந்த 3 வருடங்களாகவே அதிமுகவில் ஈகோ பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இபிஎஸ்-ஓபிஎஸ் என்று இரு ஜாம்பவான்கள் கீழே கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
அதுவும், தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிப்பின்போது ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டது. இவர் ஒரு நபரை கைகாட்டினால், தனக்கு வேண்டப்பட்ட நபரை அவர் கைகாட்டுவார். இதனால்தான், திண்டுக்கல், ராமநாதபுரம், மதுரை என முக்கிய தொகுதிகள் அதிமுகவின் கையை விட்டு நழுவி போனது.
நிர்ப்பந்தம்
கோஷ்டி மோதல், உள்கட்சி பூசல், போன்றவைகளாலும், நீயா, நானா என அமைச்சர்களுக்குள் மோதல் வலுத்ததாலும்தான், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் கூட கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிவிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதற்கு தேர்தல் ரிசல்ட்டுகளே முக்கிய சாட்சி!
மத்திய அமைச்சரவை
தேர்தல் முடிந்தும்கூட, மத்திய அமைச்சரவையில் யார் இடம் பிடிப்பது என்பதில் மோதல் வலுத்தது. வைத்திலிங்கம் பெயரை ஒரு தரப்பும், ரவீந்திரநாத் கூடாது என்று ஒரு தரப்பும் என முட்டல், மோதல் நடந்ததையும் தமிழகம் வேடிக்கை பார்க்கவே செய்தது.
இரட்டை தலைமை
அதுபோலவே, தங்க தமிழ்செல்வனை ஒரு தரப்பு அதிமுகவுக்குள் கொண்டு வர முயற்சித்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போஸ்டர் ஒட்டும் வரை விவகாரம் சென்றுவிட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இரட்டை தலைமை விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. இவ்வளவு ஓட்டை, உடைசல்களை ஒரு ஆளும் தரப்பு பெற்றிருந்தால், எப்படி முக்கிய பிரமுகர்கள் இந்த கட்சியில் இணைவார்கள் என்பதுதான் கேள்வியாக எழுந்துள்ளது.
உஷார்.. உஷார்
இதையெல்லாம் பார்த்துதான், நொந்து போன நிர்வாகிகள் சிலர், "ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும், ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.. உஷார்" என்று போஸ்டர் அடிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி தரப்பு
தங்க தமிழ்செல்வன் வந்தால் தொகுதியில் தனக்கு பிரச்சனை வரும் என்று ஓபிஎஸ் நினைக்கிறார். செந்தில் பாலாஜி வந்தால் தனக்கு ஆபத்து என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இப்படியே ஆளாளுக்கு தங்களை பற்றியே நினைப்பதுதான் கட்சிக்கு முதல் பலவீனமாக அமைந்துள்ளது. இவர்கள் இரு பக்கம் கோலோச்சுகிறார்கள் என்றால், அமைச்சர் பெருமக்களில் மணியான அமைச்சர்கள் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள். இவர்களை மீறி எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற எண்ணமும் உள்ளதாம்.
கரைகிறதா?
அமமுகவில் இப்படிதான் ஒரு கட்டுக்கோப்பின்மை காணப்பட்டது. சசிகலா ஒன்று சொன்னால், தினகரன் ஒன்று செய்ய.. இவர்களை நம்பி இருந்த 18 பேரும் மண்டையை பிய்த்து கொள்ள.. கடைசியில் கரையவே ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட அதே நிலையில்தான் அதிமுகவும் உள்ளது. ஆக மொத்தம், இந்த இரு கட்சிகளும் வருகிற தேர்தலுக்குள் மேலும் கரைந்து பலமிழந்து வலுவிழந்து போய் விடும் வாய்ப்புகள் உள்ளதை யாரும் மறுக்க முடியாது.