எல்லோரையும் ஏத்தி வச்சேன்.. என் மகனுக்கு உதவ யாரும் இல்லை.. வருத்தத்தில் அழகிரி
Recommended Video
சென்னை: உதயநிதிக்கு பொறுப்பு தந்துட்டாங்க.. யார் யாரையோ தூக்கி உயர்த்தினேன். ஆனா என் மகனை ஒரு உயர்ந்த இடத்தில் உட்கார வைக்காம போய்விட்டதே" என்று அஞ்சாநெஞ்சர் அழகிரி புலம்பி வருவதாக கூறப்படுகிறது.
கருணாநிதி இறந்த ஓரிரு தினங்களிலேயே நான்தான் திமுக என்றார்... என்னிடம்தான் எல்லா ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்றார்.. என் தொண்டர்கள் பலத்தை காட்டுவேன் என்றார்.
கட்சியில் சேர்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.. கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன் என்றார்!!
அடிப்படை உறுப்பினர்
கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலம் நடத்தினார்... மீண்டும் என்னை கட்சிக்குள் சேர்த்து கொள்ளுமாறு கெஞ்சாத குறையாக கடைசியாக கேட்டு பார்த்து விட்டு ஓய்ந்தே போய்விட்டார் அழகிரி! இத்தனையையும் ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமலேயே செய்து காட்டினார்.
விவகாரம்
இதெல்லாம் போதாதென்று அழகிரியின் மகனும் தந்தைக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று களத்தில் இறங்கி சில அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்தார். ஆனால் திமுக தலைமை ஒரு பொருட்டாக இந்த விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே எடுத்து கொள்ளவில்லை.
உதயநிதி
நடந்து முடிந்த தேர்தல் முதல் உதயநிதி நியமனம் வரை நடந்துமுடிந்து விட்டது. ஆனால் அழகிரியிடம் இருந்து ஒரு சத்தத்தையும் காணோம். இவர் மட்டுமில்லை.. இவரது மகன் தயாவும் அமைதியாகவே இருக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருந்தவர், ட்விட்டர் பக்கமும் சரியாக வருவது கிடையாது.
மவுனம்
அழகிரியின் பெருத்த மவுனம் பற்றி அவரது ஆதரவாளர்கள் சொல்லும்போது, "யாரிடமும் எதுவும் பேசுவது இல்லை.. சென்னையிலுள்ள மகன் துரை வீடு, மதுரை வீடு என்று போய் போய் வருகிறார். அரசியல் குறித்து ஏதாவது முடிவெடுங்கண்ணே என்று நாங்கள் கேட்டால், 'அமைதியாக இருங்கள்' என்று மட்டும் சொல்கிறார்.
ரஜினி
எவ்வளவு நாளைக்குதான் நாங்கள் இப்படி இருக்கிறது? ரஜினி கட்சியில் சேரப்போகிறார் என்று ஒரு குரூப் கிளப்பி விட்டுக் கொண்டே இருக்கிறது. "உதயநிதியை இளைஞரணி செயலாளராகவும் ஆக்கிவிட்டார்கள். ஆனால், நான் எத்தனையோ பேரை பெரிய இடத்துக்கு கொண்டு வந்தேன். என் மகனை ஒரு உயர்ந்த இடத்தில் வைக்க முடியாம போச்சே" என்று புலம்புகிறார். அண்ணன் ஏதாவது ஒரு முடிவு எடுத்தால் நல்லா இருக்கும்" என்கிறார்கள்.
சுபாவம்
எந்த தொண்டரிடத்திலும் இயல்பாக மனம் விட்டு அன்புடன் நடந்து கொள்ளும் சுபாவத்தை உடைய அழகிரிக்கென்றே ஒரு தனி கூட்டம் இப்போதும் உள்ளது. அழகிரியின் பெருத்த மௌனம் அவர்களை அதிகமாகவே கவலை கொள்ள செய்துள்ளது. தன் நிலைப்பாட்டை அழகிரி தெரிவிப்பாரா? அல்லது அப்போதும் இப்படியேதான் அமைதியாக ஒதுங்கியே இருப்பாரா? என்பது தெரியவில்லை.