கூட்டணியில் விரிசலா.. அழகிரியின் பரபர அறிக்கைக்கு இதுதான் காரணமா.. சூடாகும் அரசியல் களம்
திமுக-காங்கிரஸ் விரிசல் ஏற்பட்டுள்ளது
சென்னை: ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ, ஒரு துணை தலைவர் பதவியோகூட இதுவரை வழங்கப்படவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திமுகவின் செயல்பாடு கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்று அதிகாரப்பூர்வமாக இதனை அறிக்கை வாயிலாகவும் தெரிவித்துள்ளார்.. இதற்கு என்ன காரணம்?
உள்ளாட்சி தேர்தல் ஆரம்பித்த சமயமே கூட்டணிக்குள் நிறைய மனக்கசப்பு ஏற்பட்டது.. காங்கிரஸ் கேட்ட இடங்களை திமுக தரவில்லை என்ற புகார் எழுந்தது.
அதையும் மீறி காங்கிரசுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களிலும் திமுக வேட்பாளர்களே வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. இதை பற்றி திமுக மாவட்ட செயலாளர்கள் சிலரை கேட்டதற்கு அதிருப்தியான பதிலே காங்கிரசுக்கு கிடைத்திருக்கிறது. அதனால் கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் தனியாகவே நின்று போட்டியிடுகிறோம் என்று காங்கிரஸ் அறிவித்துவிட்டது.
இதனிடையே, "ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் நம்மை திமுக சரியாக நடத்தவில்லை.. இப்படியே போனால் அடுத்த கட்ட உள்ளாட்சி தேர்தலில் நமக்குதான் சிக்கல்.. இப்பவே நம்மை திமுக மாவட்ட தலைவர்கள் மதிக்கவில்லை.." என்று காங். மா.செ.க்கள் தலைமையிடம் குமுறியதாக தகவல்கள் கசிந்தன.
ஆனால் தொடர்ச்சியாக புலம்பி வரவும், அழகிரி அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தும் முடியவில்லையாம்.. நிர்வாகிகள் அளவுக்கு அதிகமான அதிருப்தியில் உள்ளதாலும், அப்படியே விட்டால் அது கட்சிக்கு சரியாக இருக்காது என்பதாலும்தான் அழகிரி திடீரென இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால், கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வளவு பகிரங்கமான அறிக்கை விடுவதை திமுக எப்படி எடுத்து கொள்ளும் என தெரியவில்லை... அது மட்டுமல்ல, இதுவரை அவர்களுக்குள் என்ன நடந்தது என்பது வெளிப்படையாக தெரியாத நிலையில், அழகிரியின் இந்த அறிக்கைதான் கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் தெரிகிறது.
அதேபோல, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாராகிவிட்டதா என்றும் தெளிவாகவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் எதிர்ப்புகளை சம்பாதித்து கொள்ள விரும்பாமல் தலைமை இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பது மட்டும் யூகிக்க முடிகிறது. எனினும் திமுக தலைமை அழகிரியின் இந்த தடாலடி அறிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறதோ.. நாளைக்கு நடக்க போகிற தேர்தலை எப்படி சந்திக்க போகிறதோ.. கூட்டணியின் விரிசல் கூடுமா, குறையுமா.. பொறுத்திருந்து பார்ப்போம்!