எடப்பாடியாரின் "மாஸ்டர்" பிளான்... "அவரை" சந்தித்தது இதற்குதானா.. இறங்கி வந்த பாஜக..!
முதல்வர் விஜய் இருவரின் சந்திப்புக்கு பின்னணி காரணம் கசிந்து வருகிறது
சென்னை: ஒரு விஷயம் தமிழக அரசியலில் கசிந்து வருகிறது.. அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், நடப்பதை எல்லாம் பார்த்தால், அது நிஜம்தானோ என்றும் சந்தேகம் எழுகிறது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை சமீப காலமாகவே அதிமுகவிடம் கெத்து காட்டி வருகிறது.. 2 மாதமாக, ரஜினியின் வருகை உறுதியானதால், பாஜகவின் நெருக்கடியும், அதிகமாகி கொண்டே வந்தது.
தங்களுக்கு 60, 40 சீட் வேண்டும் என்று டிமாண்ட் வைத்து வருகிறது.. கோட்டையில் காவி கொடி ஏறும் என்று சொன்னபோதும் சரி, தாங்கள் சொல்பவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி வரும்போதும் சரி, எதற்குமே எடப்பாடியார் அசரவில்லை.
திமுக ஆட்சியில் இல்லாத போதே கட்டப்பஞ்சாயத்து செய்கிறது... முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கு
நிலைப்பாடு
மாறாக, 2 விஷயங்களில் முதல்வர் உறுதியாக இருந்தார்.. முதலாவதாக, எந்த காரணத்தை கொண்டும், கூட்டணி ஆட்சி இல்லை என்ற வலுவான நிலைப்பாட்டை தெரிவித்து கொண்டே இருந்தார்.. ஒருபக்கம் ஜெயக்குமாரும் தன் பேட்டிகளில் சொன்னார், முதல்வரும் தான் சென்ற இடமெல்லாம் அதையே வலியுறுத்தியபடி இருந்தார்.
எடப்பாடியார்
மற்றொன்று, ரஜினியின் வருகை எடப்பாடியார் தரப்புக்கும் சற்று கலக்கத்தை தந்துதான் வந்தது.. இதற்கு காரணம், எம்ஜிஆருக்கு துணை நின்றவர்கள் ரஜினிக்கு பின்னால் வருவார்கள் என்று ஒருமுறை தமிழருவிமணியன் சொல்லி இருந்தார்.. மேலும், ரஜினியின் வருகையை ஓபிஎஸ் வரவேற்று பேசியிருந்தார்..
நிர்வாகிகள்
அதனால்தான், உண்மையிலேயே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் யாராவது ரஜினி பக்கம் செல்ல வாய்ப்பிருக்குமோ? ரஜினி வருகையானது ஒருவேளை அதிமுகவை பாதிக்குமா? இப்போதைய நிலையில் ரஜினி எத்தனை சதவிகித வாக்குகள் வாங்குவார்? என்ற பல சந்தேகங்களை வைத்து அந்த சைலண்ட் சர்வே முதல்வர் தரப்பு எடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆதரவு
ரஜினிக்கு 3% ஆதரவுதான் இருக்கிறது என்று ரிப்போர்ட் வந்தாலும், அதிமுகவுக்கு சாதகமான விஷயம் அவ்வளவாக இல்லை என்று முடிவு வந்திருந்தது.. இது முதல்வர் தரப்புக்கு அதிர்ச்சியைதான் தந்ததாம். ரஜினி வந்ததால் சிறுபான்மை வாக்குகள் சிதறுமா என்பதுதான் அடுத்த கவலையாகவும் உருவெடுத்ததாக சொல்லப்பட்டது.
சந்திப்பு
இப்படிப்பட்ட சமயத்தில்தான், விஜய் - முதல்வர் சந்திப்பு நடந்துள்ளது.. திரையரங்கு விவகாரம் சம்பந்தமாக பேச ரகசியமாக இவர்கள் சந்திக்க வேண்டியதே இல்லையே? என்ற யதார்த்த கேள்வியும் இத்துடன் எழுகிறது.. அதனால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது.. அதுமட்டுமல்ல, கடந்த சில மாதங்களாகவே விஜய்யின் அப்பா திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஒரு செய்தி கசிந்தபோதே, விஜய்க்கு சாதகமான விஷயத்தை அதிமுக தரப்பும் எடுக்க தொடங்கிவிட்டதாம்..
டென்ஷன்
இந்த சூழலில்தான், மாஸ்டர் படத்திற்கு 100 சதவீத பார்வையாளர்களை தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என்று விஜய் ஒரு கோரிக்கையை முதல்வரிடம் வைக்க, அதற்கு எடப்பாடியார் தரப்பும் ஓகே சொல்லி, தேர்தல் சமயத்தில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பதிலுக்கு கேட்டுகொள்ளப்பட்டதாக சொல்லப்படுகிறது.. ரஜினியை தாங்கள் எதிர்நோக்கி இருக்கும்போது, இப்படி விஜய்யை அழைத்து முதல்வர் தரப்பு பேசியது பாஜகவுக்கு இன்னும் டென்ஷனை தந்துவிட்டதாம்.
சமாதானம்
போதாக்குறைக்கு ரஜினியும் தன் முடிவை சொல்லிவிட, வேறு வழியின்றி, எதுவும் பேசமுடியாமல் அதிமுகவிடம் சமாதான கொடியை பறக்க விட்டது பாஜக என்கிறார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், விஜய் - முதல்வர் சந்திப்பாகட்டும், ரஜினியின் முடிவாகட்டும், அதிமுகவுடன் பாஜகவின் திடீர் இணக்கமான போக்காகட்டும்.. எல்லாமே எங்கோ ஒரு புள்ளியில் ஒன்று சேர்வது போலவே இருக்கிறது!
சாத்தியமா?
அதேசமயம், எடப்பாடியார் போக்குக்கு விஜய் ஒத்துவருவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ரஜினியே களம் இறங்காத நிலையில் எதற்காக அதிமுகவுடன் ஒத்துப் போக வேண்டாம்.. பேசாமல் கில்லி மாதிரி தன் பாதையில் தனித்து இறங்கிப் பார்க்கலாமா என்று விஜய் யோசித்தால் அதிமுகவுக்கு நிச்சயம் சிக்கலாகும் என்றும் சொல்கிறார்கள். மாஸ்டர் படம் ரிலீஸாகி வசூலைப் பார்த்த பிறகு விஜய் அதிரடி காட்டலாம் என்ற பரபரப்பும் இருக்கிறது. "கில்லாடி"க்கு ஆப்பு வைப்பாரா "கில்லி".. அல்லது இருவரும் இணைந்து சொல்லி அடிப்பார்களா.. மக்கள் "வெயிட்டிங்"