அந்த பக்கம் "பாட்ஷா".. இந்த பக்கம் "சின்னம்மா".. என்ன செய்யலாம்.. குழப்பத்தில் தவிக்கும் பாஜக!
அடுத்த கட்டத்துக்கு நகர முடியாமல் பாஜக தலைமை தவித்து வருகிறதாம்
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அடுத்ததாக என்ன செய்வதென்றே தெரியாமல், ரஜினியா.. சசிகலாவா.. என்ற ரேஞ்சுக்கு யோசித்து வருகிறது பாஜக!
நாடெல்லாம் மோடி அலை வீசினாலும், தமிழ்நாட்டு பக்கம் அப்படி ஒரு அலையே என்னைக்கும் வீச வாய்ப்பில்லை போலிருக்கிறதே என்பதை நடந்து முடிந்த தேர்தல் பாஜக தலைமைக்கு உணர்த்தி உள்ளது. பாஜக மண் என்று சொல்லப்பட்ட கன்னியாகுமரி உட்பட 5 இடங்களிலுமே அதே மண்ணை கவ்வியது பெருத்த அதிர்ச்சிதான்!
இதனால் பாஜக தலைமையோ, தோல்வி அடைந்தது குறித்து, மாநில பாஜகவிடமும், அதிமுகவிடம் நிறைய முறை கேள்விகள் கேட்டாகி விட்டது.. விளக்கமும் தந்தாகி விட்டது.. ஆனாலும் அடுத்த கட்டத்துக்கு எப்படி தமிழக பாஜகவை கொண்டு செல்வது என்பதில் திணறி வருவதாக சொல்லப்படுகிறது.
நம்ம கோட்டையில் திமுக கொடியா.. வேதனையுடன் வேடிக்கை பார்த்த பொள்ளாச்சி அதிமுகவினர்
ஒற்றை தலைமை
அதற்காக ஒருசில முயற்சிகளையும் செயல்படுத்தலாமா என்ற ஆலோசனையிலும் உள்ளது. முதலில் சசிகலா விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஒரு பக்கம் சசிகலா விடுதலை என்ற செய்தியும், மற்றொரு பக்கம் வலிமையான ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கையும் பலமாக எழுந்து வருகிறது. அதாவது பலமான தலைமையை சசிகலாவால் தர முடியும் என்பதாலேயே விடுதலை விவகாரமும் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினி
அடுத்த முயற்சி ரஜினியை நாடுவது... ரொம்ப வருஷமாக சொல்லி கொண்டிருக்கும் அவரை, முதலில் ஒரு கட்சியை ஆரம்பிக்க வைத்து, பாஜக உள்ளிட்ட கட்சிகளை அதனுடன் இணைத்து, அதன்மூலம் தமிழகத்தில் தாமரையை மலர செய்யலாமா என்று யோசித்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல்
இன்னொரு பக்கம், உள்ளாட்சி தேர்தல் என்ற விவகாரம் தலையை பிய்த்து கொள்ள வைத்துள்ளது. தனித்து போட்டியிட்டிருந்தால் ஆவது நாங்கள் ஜெயித்திருப்போம், உங்களோடு கூட்டணி வைத்து ஒன்றும் இல்லாமல் போய்விட்டதே என்று பியூஷ்கோயல் வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. அப்படியானால் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டு, பலத்தை காட்டும் என்று பார்த்தால், அதற்கும் வழி இல்லாமல் உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடும் இதுவரை தெரியவில்லை.
தாமரை மலருமா?
அதனால் என்னதான் செய்வது, எப்படித்தான் கரை சேர்வது, தாமரையை மலர வைப்பது என்று பாஜக குழம்பி தவித்து வருகிறதாம்.. இதெல்லாவற்றையும் விட ஒரு சிம்பிளான வழி இருக்கிறது. அது..மக்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடிக்கும் வகையில் பாஜகவே தனித்து களம் இறங்குவதுதான்.
செயல்பாடுகள்
எப்படியென்றால் தமிழகத்தின் தலையாய பிரச்சினைகளில் பாஜக இன்னும் மனித நேயத்துடன் செயல்பட்டு அதைத் தீர்க்கும் வகையில் சில பல செயல்பாடுகளைக் காட்டினாலே போதும் தமிழக மக்களுக்கு பாதி நம்பிக்கை வரும். அதே போல, தமிழக மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களை அறவே ரத்து செய்து விட்டால் இன்னும் பாஜக மீது மக்களுக்கு நம்பிக்கை கூடும். மொத்தத்தில் மக்களுக்குப் பிடித்தாற் போல மாறுவது மட்டுமே பாஜகவுக்கு ஒரே வழி.. அதைச் செய்தால் ரஜினியும் தேவையில்லை, சசிகலாவும் தேவையில்லை.. யோசிப்பாங்களா!