நல்லா கேட்டுக்கோங்க.. அது உங்களுக்கு சரிவராது.. ரஜினியை யோசிக்க வைத்த அந்த ஒரு அட்வைஸ்!
கமல், ரஜினியின் திடீர் அரசியல் பிணைப்புக்கு என்ன காரணம் என உறுதியாக தெரியவில்லை
Recommended Video
சென்னை: " உங்களுக்கு பாஜக சரிப்பட்டு வராது.. அவர்களுடன் இணைந்தாலோ அல்லது ஆதரித்தாலோ.. தமிழக மக்கள் உங்களை ஏற்க மாட்டார்கள்".. இதுதான் ரஜினி காதுக்கு போன ரகசிய மெசேஜ்.. அதன் பிறகுதான் அவர் கமல் பக்கம் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தார் என்று சொல்கிறார்கள்.
தமிழக மக்களின் மனதில் எப்படி எம்ஜிஆர் - சிவாஜிக்கு ஒரு தனி இடம் உள்ளதோ அதேபோலத்தான் ரஜினி - கமலுக்கும் அருமையான இடத்தை மக்கள் கொடுத்துள்ளனர். இருவரையும் விரும்புவோர் தமிழகத்தில் அதிகம். அப்படி இருக்கும்போது நீங்கள் இருவரும் இணைந்து போய் அவர்கள் முன்பு நின்றால் திமுக, அதிமுகவுக்கு அடுத்த மாற்றாக நீங்கள் விஸ்வரூபம் எடுக்கலாம்.. இதுவும் ரஜினி காதுக்கு போன ஒரு செய்தி.
இப்படி அடுத்தடுத்து வந்த ஆலோசனைகளாலும், தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த பல நிகழ்வுகளையும் சீர் தூக்கிப் பார்த்த ரஜினி, சரிதான்..இவற்றிலும் உண்மை இருக்கே என்று யோசிக்க ஆரம்பித்தாராம். இதனால்தான் கமல் பக்கம் அவர் திரும்பி நடக்க ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள்.
ஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்??
பிரச்சாரம்
என்னதான் ரஜினி தமிழத்தின் செல்லப் பிள்ளையாக இருந்தாலும் கூட அவரை மண்ணின் மைந்தன் அல்ல என்று சொல்ல பலரும் காத்துள்ளனர். பலரும் அதை பிரச்சாரமாகவே எடுத்து வைத்தும் வருகின்றனர். நாளை கமலுடன் இணைந்து கை கோர்த்து போய் மக்கள் முன்பு நிற்கும்போது இந்த பிரச்சாரத்தை கமல்ஹாசனே அடித்து நொறுக்கி தகர்த்து ரஜினியை ரிலாக்ஸ் ஆக்குவார் என்பதும் இவர்களின் இணைப்பை விரும்புவோரின் வாதமாக உள்ளது.
அதிமுக-பாஜக
சரி கமல் ஹாசனை நோக்கி ரஜினி திரும்பியது இருக்கட்டும்.. இதற்கான முக்கியக் காரணிகள் ஏதாவது வேண்டுமல்லவா.. அதுதான் அதிமுக மற்றும் பாஜக. ரஜினியைப் பொறுத்தவரை அவர் மீது தெரிந்தோ தெரியாமலோ பாஜக முத்திரை விழுந்து விட்டது. அதிலிருந்து இன்னும் கூட அவர் முழுமையாக மீளவில்லை என்பதே நிதர்சனம். காரணம், இன்னும் முழுமையான மக்கள் தொண்டனாக அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல்தான் உள்ளார்.
முக்கோண சூழல்
தமிழகத்தைப் பொறுத்தவரை நடப்பது அதிமுக ஆட்சி. அதைக் கட்டுப்படுத்துவது பாஜக.. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். திமுக இந்த இரு கட்சிகளின் பொது எதிரி. இப்படி முக்கோண சூழலில் வரும் சட்டசபைத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை. ஆனால் இந்த இடத்தில்தான் கமல் தனது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்கிறார்கள்.
அபிப்ராயம் இல்லை
கமலும் ரஜினியும் நேரில் பேசினார்களா அல்லது தூதர்கள் மூலம் பேசினார்களா என்று தெரியவில்லை.. ஆனால் இருவருக்கும் இடையே பேச்சுக்கள் நடந்துள்ளன. அதில் பல முக்கிய ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ளன. அதன் முக்கிய பொருளாக இடம் பெற்றது.. எப்படி ஒரே கல்லில் 3 மாங்காய்களை வீழ்த்துவது என்பது. "பாஜகவுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தாலோ அல்லது வெளிப்படையாக இணைந்தாலோ அது உங்களுக்கு நலம் பயக்காது. காரணம், தமிழ்நாட்டு மக்களிடையே பாஜக மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. இதை நீங்கள் உணர வேண்டும். உங்களது பெயரும், இத்தனை காலமாக சேர்த்து வைத்த நல்ல அபிமானமும் கெட்டுப் போகும் நிலை கூட வரலாம்" என்று கமல் தரப்பிலிருந்து சுட்டிக் காட்டப்பட்டதாம்.
யோசியுங்கள்
அதேபோல "அதிமுக பக்கம் சாய்ந்தாலோ அல்லது அதிமுகவிலேயே போய் இணைந்தாலோ கூட அதுவும் உங்களுக்கு எதிர்பார்க்கும் பலனைத் தராது. மேலும் நீங்கள் வலுவிழப்பதைக் காண திமுக காத்துக் கொண்டுள்ளது. நீங்கள் ஒருமுறை வலுவிழந்து போனால் மீண்டும் எழுவது சாத்தியமில்லாதது. காரணம், காலம் கடந்து வந்து நிற்கிறீர்கள்.. எனவே வரும்போதே வீரியமாக வருவதுதான் உங்களது அரசியலுக்கு சரியானது.. யோசியுங்கள் என்று ரஜினிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பாஜக-திமுக-அதிமுக
இதை யோசித்து பார்த்த பிறகே கமலுடன் இணையலாம் என்ற யோசனைக்கு ரஜினி வந்ததாக சொல்கிறார்கள். இந்த இணைப்பின் மூலமாக பாஜக, திமுக, அதிமுக என மூன்று கட்சிகளையும் வரும் தேர்தலில் ஓரம் கட்ட முடியும் என்பது கமல் தரப்பின் யோசனை என்கிறார்கள். இந்த இணைப்பை இனி ரசிகர்கள் மட்டத்திற்குக் கொண்டு செல்லத் தேவையான வேலைகள் களை கட்டப் போகிறதாம். காரணம், இருவரது ரசிகர்களுமே எலியும் புலியுமாக உள்ளவர்கள். மனதளவில் இணைந்து செயல்பட முடியாத இரு வேறு பாதைகளில் பயணித்து வந்தவர்கள். எனவே இதுதான் மிகப் பெரிய சவாலாக மாறப் போகிறது.
அதிர்ச்சி
இந்த இணைப்பு கமல், ரஜினி தரப்புக்கு உற்சாகத்தையும், திமுக, அதிமுக, பாஜக தரப்புக்கு அதிர்ச்சியையும் கொடுத்தாலும்.. இன்னும் ஒரு முக்கியமான நபருக்கு எனன மாதிரியான உணர்வைக் கொடுத்துள்ளது என்பதை தேர்தலுக்குப் பிறகே தெரிந்து கொள்ள முடியும்.. அந்த மூன்றாவது நபர்.. வேற யாரு.. நம்ம மக்கள்தான்!