ஒரே லாட்ஜில், ஒரே ரூமில் ஆணும் பெண்ணும் தங்க சட்டத்தில் தடை இல்லையே... சென்னை ஹைகோர்ட் கேள்வி!
ஒரே ஓட்டல் அறையில் திருமணமாகாத ஆண்-பெண் தங்கலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது
கோவை: "கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே லாட்ஜில், ஒரே ரூமில் தங்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லையே.. கல்யாணம் ஆகாத 2 பேரும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
கோவையில் ஒரு தனியார் லாட்ஜ் ஒன்று எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென மூடப்பட்டது. இந்த லாட்ஜில் ஒரு ரூமில், கல்யாணமாகாத ஒரு ஆணும், பெண்ணும் தங்கியிருந்துள்ளனர்.. இன்னொரு ரூமில் மதுபாட்டில்கள் இருந்துள்ளன.. அதனால், போலீசார் இந்த லாட்ஜை பூட்டி சீல் வைத்தனர்.
இந்த லாட்ஜ் ஓனர் ஹரியானாவை சேர்ந்தவர்.. அதனால், இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. அந்த வழக்கு நீதிபதி எம்எஸ் ரமேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
லாட்ஜ்
அப்போது, பத்திரிகைகள், சோஷியல் மீடியாவில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டுதான் லாட்ஜ் மூடப்பட்டு விட்டதாகவும், இதற்கு லாட்ஜில் எந்த விளக்கமும் கேட்காமல் சீல் வைத்தது, இயற்கை நீதிக்கு எதிரானது என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.
சோதனை
ஆனால், "லாட்ஜில் சோதனை நடத்தும்போது, ஒரு ரூமில் கல்யாணம் ஆகாத ஆண், பெண் இருந்ததாகவும், இன்னொரு ரூமில் மதுபாட்டில்கள் லைசென்ஸ் பெறாமல் வைக்கப்பட்டிருந்தது என்றும், அதற்காகவே சீல் வைத்தோம்" என்றும் போலீஸ் தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டது.
விளக்கம்
எனினும் போலீசாரின் இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்கவில்லை.. "கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும் ஒரே ரூமில் தங்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லையே.. கல்யாணம் ஆகாத 2 பேரும் ஒரே ரூமில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது? கல்யாணமாகாத, ஆணும் பெண்ணும் ‘லிவிங் டுகெதர்' முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ, அதுபோலதான், 2 பேரும் ஒரே லாட்ஜில், ஒரே ரூமில் தங்குவதும் குற்றமாகாது" என்று விளக்கம் அளித்தார்.
மதுபாட்டில்கள்
"ஒரு ரூமில் மதுபாட்டில்கள் கிடைத்துவிட்டால், அதை இவர்கள் விற்பனை செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது.. தமிழ்நாடு மதுபான சட்டப்படி, தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டரும், வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டரும், பீர் - 7.8 லிட்டரையும், 9 -லிட்டர் ஒயினையும் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கி உள்ளன" என்பதை நீதிபதி சுட்டிக்காட்டியதுடன், லாட்ஜில் மதுபாட்டில்கள் இருந்தது குற்றமில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.
உத்தரவு
எனவே, உரிய சட்டவிதிகளை பின்பற்றாமல் வைக்கப்பட்ட சீலை, 2 நாட்களில் அகற்றவும் கோவை மாவட்ட கலெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.