ஒரே இரவில் டெல்லியாக மாறிய சென்னை.. மோசமாக மாசடைந்த காற்று.. போகியால் வந்த புகை!
ஒரே இரவில் டெல்லி அளவிற்கு சென்னை மாநகரில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து உள்ளது.
சென்னை: ஒரே இரவில் டெல்லி அளவிற்கு சென்னை மாநகரில் காற்று மிக மோசமாக மாசு அடைந்து உள்ளது.
இந்தியாவில் மிக மோசமான காற்றை கொண்டது டெல்லிதான். இந்தியா என்று சொல்வதை விட, உலகிலேயே மிக மோசமான காற்றை கொண்ட நகரம் டெல்லி என்றுதான் சொல்ல வேண்டும்.
எந்த நடவடிக்கை எடுத்தும் மத்திய அரசாலோ, டெல்லி அரசாலோ புகையை அங்கு கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த நிலையில் சென்னையும் அதேபோல் மாசடைந்து இருக்கிறது.
டெல்லி மோசம்
டெல்லியில் எப்போதும் காற்று சுவாசிக்க முடியாத நிலையில் இருக்கிறது. முக்கியமாக நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை காற்று மிக மோசமான நிலையில் சுவாசிக்க முடியாத அளவிற்கு இருக்கும். 350 புள்ளிகளுக்கும் அதிகமாகத்தான் டெல்லியின் காற்று மாசு எப்போதும் இருக்கிறது.
சென்னை தொட்டது
தற்போது சென்னையும் இதே புள்ளியை தொட்டு இருக்கிறது. இன்று காலை சென்னையில் பல இடங்களில் காற்று மாசு 350 புள்ளிகளை தாண்டியது. எழும்பூரில் காற்று மாசு 388 புள்ளிகளாக இருந்தது. இன்று அதிகாலை சென்னையில் எழும்பூரில்தான் காற்று மிக மோசமாக மாசடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.
சுவாசிக்க முடியாது
பொதுவாக காற்று மாசு 350 புள்ளிகளை தாண்டினால் அது சுவாசிக்க ஏற்ற காற்று கிடையாது. இந்தியாவில் டெல்லியில் மட்டுமே அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது சென்னையிலும் ஒரே இரவில் அந்த சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
சரியாக வாய்ப்புள்ளது
இந்த காற்று மாசு இரண்டு நாட்களில் சரியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த காற்று எப்படியும் சரியாகும் என்று கூறுகிறார்கள். இதனால் சென்னையில் உள்ள மக்கள் பெரிய அளவில் கஷ்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.