அதிமுக பொதுக்குழு எப்போது..? தேதி குறிக்கத் தயாராகும் அதிமுக தலைமை...!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும், விரைவில் பொதுக்குழுவை கூட்டும் திட்டத்தில் உள்ளார்களாம்.
பொதுக்குழு என்பது அரசியல் கட்சியினரை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவை போன்றது. திமுக பொதுக்குழுவை கூட்டினால் பரபரப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அந்தளவுக்கு உள் அரங்கில் காரசார விவாதம் நடைபெறும். ஆனால் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக பொதுக்குழு என்பது பெயருக்கு மட்டும் நடைபெறும். யாரும் எந்த நிர்வாகியும் மூச்சு கூட விடமாட்டார்கள்.
ஆனல் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திமுக கூட்டங்களை காட்டிலும் அதிமுக கூட்டங்களில் அனல் பறக்க விவாதங்கள் நடக்கின்றன. நிர்வாகிகள் தங்கள் உள்ளக்குமுறலை கொட்டுகின்றனர். அண்மையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஒற்றைத்தலைமை கோரிக்கையை முன்வைத்ததே அதற்கு சாட்சி.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்க முடிவெடுத்துள்ளார்களாம் ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும். வெளிநாடு பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வர் தமிழகம் திரும்பியதும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே பொதுக்குழுவை நடத்தி முடித்துவிடலாம் என எண்ணுகிறாராம் இ.பி.எஸ்.
அவர் வந்து நின்றால் அறையே கிடுகிடுக்கும்.. கிரிமினல் வழக்கின் கிங்.. விடைபெற்றார் ராம் ஜெத்மலானி!
வழக்கமாகன் டிசம்பர் மாதமோ, ஜனவரி மாதமோ தான் அதிமுக பொதுக்குழு நடைபெறும், இந்த முறை அக்டோபரிலேயே பொதுக்குழுவை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது அதிமுக தலைமை. சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார், ஜனவரியில் விடுதலை செய்ய வாய்ப்பு என ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் எதற்கு பிரச்சனை அடுத்தமாதமே வைத்துவிட்டால் சலசலப்புகளுக்கு வாய்ப்பிருக்காது என நினைக்கின்றனர் அதிமுக சீனியர் நிர்வாகிகள்.