"வெங்காய வெடி"யை வைத்து ஜனதாவை வெளுத்து கட்டிய இந்திரா.. 80ல் நடந்த காங்கிரஸ் மேஜிக்.. பிளாஷ்பேக்!
வெங்காய அரசியலை துணிவுடன் சந்தித்த இந்திரா காந்தி
Recommended Video
சென்னை: வெங்காய விலையை விட்டு கொஞ்சம் விலகி வருவோம்.. அதுதான் தெரிஞ்ச கதையாச்சே.. அதை வைத்து நடக்கும் அரசியல்தான் இப்ப பெருசா வியாபிச்சு நிற்குது. அதற்கு முன்னாடி ஒரு பிளாஷ்பேக் பார்க்கலாமா.. கிட்டத்தட்ட 39 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு கதை இது.. அதைத்தான் இப்ப பார்க்கப் போகிறோம்.
வெங்காய விலை உயர்வு என்பது இப்போதுதான் கிளம்பிய பிரச்சினை என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. எப்படி காஷ்மீர் பிரச்சினை பல ஆண்டுகளாக விடாமல் தொடர்கிறதோ அதேபோலத்தான் இந்த வெங்காய விலை உயர்வும். தொடர்ந்து இந்தியாவை உலுக்கி வருகிறது.
என்ன மேட்டர் என்றால் இது பல முறை ஆட்சிகள் கவிழவும் உதவியிருக்கிறது. அதனால்தான் வெங்காய விலை உயர்வு வந்தாலே அதில் அரசியலும் சேர்ந்து கொள்கிறது.
விஸ்வரூபம்
80களிலும் இப்படி ஒரு வெங்காய பிரச்சினை உருவெடுத்தது. இந்தியாவையே புரட்டிப் போட்டது. எங்கு பார்த்தாலும் போராட்டங்கள் வெடித்தன. வெங்காய விலையைக் குறைக்கக் கோரி போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்தன. அதன் உச்சமாக அப்போதைய காங்கிரஸ் தலைவர் (அப்போது அது இந்திரா காங்கிரஸ்) இந்திரா காந்தி தலைமையில் மிகப் பெரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சரண்சிங்
அந்த சமயத்தில் மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் சரண்சிங் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா கூட்டணி இருந்தது. சரண் சிங் அரசால் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுமாறினார். விலை உயர்வால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இதை இந்திரா காந்தி மிகச் சரியாக பயன்படுத்தினார். தானே களத்தில் இறங்கினார்.
ஜனதா கட்சி
அந்த தேர்தலை ஜனதாக் கட்சி பிளவு பட்டு சந்தித்தது. இரு கூட்டணிகளாக களம் கண்டனர். ஒரு கூட்டணிக்கு சரண் சிங்கும், இன்னொரு கூட்டணிக்கு ஜெகஜீவன் ராமும் தலைமை தாங்கினர். இந்திரா காந்தி இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தினார். வெங்காய மாலையோடு நாடு முழுக்க அவர் பிரச்சாரக் களத்தில் குதித்தார். சரண் சிங் தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாக் கூட்டணி அரசால் விலையைக் குறைக்க முடியாது. என்னிடம் ஆட்சியைக் கொடுங்கள். பிறகு பாருங்கள் விலை குறைகிறதா இல்லையா என்று சவால் விட்டார். இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்திரா காந்தி
என்ன விசேஷம் என்றால் மிசா சட்டத்தை இந்திரா காந்தி அமல்படுத்தியதால் நாடு முழுவதும் எழுந்த கோப அலை காரணமாக 1977ல்தான் இந்திரா காந்தி ஆட்சியை இழந்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தது... மொரார்ஜி தேசாய் பிரதமரானார்... ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால் மொரார்ஜி பதவி விலக நேரிட்டது. 1979ல் சரண் சிங் பிரதமரானார்.. எனினும் அவரால் இந்திரா காந்தி ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை. அங்குதான் பாலிட்டிக்ஸ் செய்தார் இந்திரா. பெரும்பான்மையை நிரூபிக்க சில நாட்களுக்கு முன்பு இந்திரா காந்தி பின்வாங்கவே, சரண் சிங் ஆட்சியும் கவிழ்ந்தது. இதனால் வந்ததுதான் 1980, ஜனவரி தேர்தல்.
வெங்காய விலை
வெங்காய விலை உயர்வு, ஜனதாக் கூட்டணியின் பலவீனம்,. இந்திரா காந்தியின் அதிரடி அரசியல், பிரச்சாரம் என பல்வேறு காரணங்களால் மக்கள் அப்படியே இந்திரா பக்கம் சாய்ந்தனர். விளைவு 353 தொகுதிகளில் இந்திரா காங்கிரஸ் அதிரடியாக வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு கூட்டணி பலவீனம் என்பதை விட வெங்காய விலைதான் மிகப் பெரிய காரணமாக இருந்தது.
ஜெகஜீவன்ராம்
இந்த தேர்தலில் சரண் சிங் கூட்டணிக்கு 41 இடங்களும், ஜெகஜீவன் ராம் தலைமையிலான கூட்டணிக்கு 31 இடங்களும் கிடைத்தன. இந்த தேர்தலில் வெங்காயம் இந்திரா காந்திக்கு பெரும் ஏற்றத்தைக் கொடுத்த அதே நேரம், பல முக்கிய தலைவர்களை காணாமல் போக செய்யவும் இந்திராவுக்கு உதவியது. அதில் முக்கியமானவர் பாபு ஜெகஜீவன் ராம். இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்கள் ஜெகஜீவன் ராமுக்கு ஆதரவாக உள்ளனர் என்ற இமேஜை அந்த தேர்தல் தோல்வி பொய்யென நிரூபித்தது.
விலை குறைந்தது
அடுத்து வந்ததுதான் ரியல் ஆச்சரியமே.. அதாவது இந்திரா காந்தி ஜெயித்து ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியதுமே வெங்காய விலை கிடுகிடுவென குறைந்தது. அது மட்டுமா.. சமையல் எண்ணெய் விலையும் படு வேகமாக குறைந்தது. ஆட்சியைக் கைப்பற்றியதும் இந்திரா காந்தி மேஜிக் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதாக நாடே இந்திரா புகழ் பாடிய ஆண்டு அது.
வியாபாரிகள்
இதற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இந்திரா காந்தி தங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்ற பயத்தில் வியாபாரிகளே வெங்காய விலையையும், பிற அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் குறைக்க ஆரம்பித்து விட்டனர். அந்தப் பயத்தை கடைசி வரை இந்திரா காந்தி விதைத்து வைத்திருந்ததால் விலை உயர்வு என்பதை இந்திரா ஆட்சிக்காலத்தில் இந்தியா பார்க்கவில்லை.
வெங்காய யுத்தம்
அதன் பிறகு மீண்டும் வாஜ்பாய் ஆட்சிக்காலத்திலும் வெங்காய விலை உயர்வு பாஜகவை பதம் பார்த்தது. பின்னர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்திலும் வெங்காயம் கண்ணில் நீர் வர வைத்தது. இதோ இப்போது மீண்டும் ஒரு வெங்காய யுத்தம் தொடங்கியுள்ளது. இதில் வெல்ல போவது யார் என்பதுதான் தெரியவில்லை. ஆக மொத்தம் வெங்காயம் என்பது வெறும் சமையல் பொருளாக மட்டும் இந்தியாவில் இல்லை.. ரஜினி மாதிரி "சீக்ரெட் அரசியல்வாதி"யாகவும் காலகாலமாக இருந்து வருகிறது என்பதுதான் சுவாரஸ்யமான உண்மை!