நகர்புற பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது...? விரைவில் தேதி அறிவிப்பு
Recommended Video
சென்னை: நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடவில்லை.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மட்டும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேதிகளையும் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பச்சை.. மஞ்ச.. சிவப்பு.. வெள்ளை.. உள்ளாட்சி தேர்தலுக்கு 4 வண்ணத்தில் வாக்குசீட்டு.. நோ இவிஎம்!
கிராமப்புற தேர்தல்
கடந்த மூன்றாண்டுகளாக இதோ வருகிறது அதோ வருகிறது எனக் கூறப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் உண்மையாகவே வந்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியின் படி உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று அறிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையம், முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவனையை மட்டும் வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு இல்லை
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் தேதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவில்லை. அதற்கான காரணம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, விரைவில் அறிவிக்கப்படும் என்ற பதிலை அளித்துள்ளார் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி.
தாமதம்
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அதனை தொலைக்காட்சிகளில் பார்த்து மகிழ்ச்சியடைந்த நகரவாசிகள், நகர்புற தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை என பின்னர் தெரிந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். எனினும், நகர்புற தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கக்கூடும் என்ற நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பதவியிடங்கள்
தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகளில் 1,064 வார்டு கவுன்சிலர்கள், 121 நகராட்சிகளில் 3,468 வார்டு கவுன்சிலர்கள், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் தேதி வரும் 7-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.