சக்சஸ் கிளைமாக்ஸ்?.. டெல்லி பறக்கும் ஓபிஎஸ்.. நிறைய "ஓட்டைகளாமே".. அப்ப எடப்பாடி பழனிசாமி சாய்ஸ்?
ஓபிஎஸ் விரைவில் டெல்லி செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது
சென்னை: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில், கடந்த 3 மாதங்களைவிட, தற்போது மேலிட பாஜக பெயர் அதிகமாகவே அடிபட துவங்கி உள்ளதாம்.. இதற்கு என்ன காரணம்?
அதிமுகவில் இரு தலைவர்களிடம் உள்ள பிரச்சனை இன்னும் தீராமல் உள்ளது.. இருவருமே கோர்ட்டை நாடியுள்ள நிலையில், அதன் இறுதி தீர்ப்பை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
சுப்ரீம் கோர்ட், தேர்தல் ஆணையம் இவை இரண்டுமே என்ன சொல்ல போகின்றன என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனால், எடப்பாடி & ஓபிஎஸ் இருவரையுமே ஒன்றுசேர்வதே சரியென்றே பாஜக நினைக்கிறது..
அங்க டென்ஷன்.. இங்க கூல்.. ஓபிஎஸ் டீமின் மூவ் 'டெல்லி’ காதுக்கு போனால்..? சட்டென திரும்பிய எடப்பாடி!
சுயம்பு
சில நாட்களுக்கு முன்பு, மூத்த தலைவரும், எடப்பாடியின் ஆதரவாளருமான வைகைச்செல்வன் நம் ஒன் இந்தியாவுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது, அதிமுக விவகாரத்தில் அதிமுக தலையிடுமா என்று நாம் கேள்வி எழுப்பியிருந்தோம்.. அதற்கு வைகைச்செல்வன், "அதிமுக ஒரு சுயம்பு.. வேற கட்சிகள் இந்த கட்சியின் அதிகாரத்தில் தலையிட முடியாது, அப்படி தலையிடுவதை நாங்களும் விரும்பவில்லை.. மற்ற கட்சிகளும் தலையிடாது, குறிப்பாக பாஜக தலையிடாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார்..
தாமரை + இலை
பாஜகவுடன் தாமரை இலை நீர்போல எடப்பாடி தரப்பின் உறவு தென்பட்டாலும், இதே நிலை எம்பி தேர்தல் வரை நீடிக்குமா? பாஜக தயவு இல்லாமல் அரசியல் செய்ய முடியுமா? எம்பி தேர்தலை இதே மிடுக்குடன் சந்திக்க முடியுமா? என்ற பல சந்தேகங்கள் வலுத்து வரும் நிலையில், வைகைச்செல்வனின் இந்த பேட்டி மிகுந்த முக்கியத்துவத்தை அன்று பெற்றது.. ஆனால், தற்போது, எடப்பாடி தரப்பு லேசான தொய்வுடன் காணப்படுகிறது. எந்த முயற்சி எடுத்தாலும், அதனால் பெரிய பலன் கிடைக்கவில்லை என்ற அதிருப்திக்கும் எடப்பாடி பழனிசாமி ஆளானதாக தெரிகிறது.
வைத்திலிங்கம்
இது ஓபிஎஸ் டீமுக்கு தெம்பை ஊட்டி வருகிறது.. அந்தவகையில் நேற்றைய தினம், மூத்த தலைவர் வைத்திலிங்கம் ஒரு சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், அதிமுகவை ஒன்றிணைக்க பாஜக தலையிட்டால் தவறில்லை, ஓபிஎஸ் விரைவில் பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் சந்திக்க உள்ளார்" என்று கூறியுள்ளார். வைத்திலிங்கத்தின் இந்த பேட்டி, எடப்பாடி கூடாரத்தை மேலும் அசைத்துபார்த்து வருகிறது.. எத்தனையோ முறை பிரதமர் மோடியை சந்திக்க முயன்றும், அது இன்றுவரை நடக்காத சூழலில், பிரதமரை ஓபிஎஸ் சந்தித்து பேசிவிட்டால், அது இன்னொரு பின்னடைவாக பார்க்கப்பட்டு விடும் என்ற கலக்கமே எடப்பாடியை சூழ்ந்துள்ளதாம்.
பிளேட்டை திருப்பிய முனுசாமி
பாஜக என்பது கூட்டணியில் இருக்கும் கட்சி மட்டுமே, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முடிவெடுப்போம், உலக தலைவர் மோடியை சின்ன பிரச்னைகளோடு இணைத்து பேசுவது நாகரிகமில்லை என்று வைத்திலிங்கம் பேச்சு குறித்து கேபி முனுசாமி கருத்து கூறினாலும், ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வாரோ? டெல்லிக்கு எதற்காக செல்கிறார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக களத்தில் ஏற்பட்டு வருகிறது.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு செய்தி சோஷியல் மீடியாவில் கசிந்தது..
பிரஷர்
அதன்படி, அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று டெல்லி மறைமுக அழுத்தம் தர துவங்கியிருப்பதாக சொல்லப்பட்டது.. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாத சூழலில்தான், வைத்திலிங்கம் இப்படி ஒரு பேட்டியை தந்துள்ளார்.. இதுகுறித்து நாம் சில அரசியல் விமர்சகர்களுடன் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:
ஸ்பீடு ஓபிஎஸ்
"95 சதவீத ஆதரவாளர்களை தன்பக்கம் வைத்து கொண்டும், கட்சியை எடப்பாடி பழனிசாமியால் தன்வசம் கொண்டு வர முடியவில்லை என்றால், ஓபிஎஸ் வலுவாக இருப்பதாகத்தானே அர்த்தம்? நிர்வாகிகளின் ஆதரவை பெற முடிந்த எடப்பாடியால், தொண்டர்களின் ஆதரவை முழுமையாக பெற முடியவில்லை என்றுதானே அர்த்தம்? எத்தனையோ முறை ஒன்றிணைய அழைப்பு விடுத்தும், எடப்பாடி தரப்பு தன் பேச்சை மதிக்கவில்லை என்பது குறித்து முறையிடவே ஓபிஎஸ் டெல்லிக்கு செல்வதாக தெரிகிறது.. ஏற்கனவே, இரு தலைவர்களை ஒன்றிணைய சொல்லி பாஜக மேலிடம் பலமுறை வலியுறுத்தியும், பிடிவாதம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி..
வீக்னஸ்
ஓபிஎஸ்ஸின் இந்த முறையீடு, எடப்பாடி மீதான கடுப்பை மேலும் அதிகமாக்கலாம்.. இரட்டை இலையை முடக்கினாலோ, அல்லது இரட்டை தலைமையே செயல்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சொல்லிவிட்டாலோ, அது எடப்பாடிக்கே சிக்கலை அதிகப்படுத்தும்.. பாஜகவின் கோபத்துக்கு ஆளாகி, ஓபிஎஸ்ஸுக்கு இருக்கும் தென்மண்டல வாக்குகளையும் சிதறவிட்டு, அதிமுகவையும் பலவீனப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இந்த பலவீனத்தை, பாஜக + திமுக + டிடிவி தினகரன் + சீமான் போன்றோர்களே வாக்குகளாக அறுவடை செய்வார்கள்.. எனவே, எடப்பாடி பழனிசாமி இனியாவது தன் பிடிவாதத்தை தளர்த்தி கொண்டு, கட்சியின் நன்மை கருதி இறங்கி வர வேண்டும்" என்றனர்.