சட்டசபை தேர்தல்.. முக்கிய அறிவிப்பு சொன்ன தேர்தல் ஆணையம்.. 'குமரிக்கு' எப்போது தெரியுமா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் நேற்று தமிழகம் வந்தார்கள். அவர்கள் தலைமை செயலாளர். டிஜிபி, மாவட்ட ஆட்சி தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட பல்வேறு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அர்சியல் கட்சியினருடனும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பேசும் போது, தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தன. சட்டசபை தேர்தல் நிறைவடைந்த இரண்டு நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யுமாறும் பல கட்சிகள் எங்களிடம் கோரின. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன.
ஏப்ரல் கடைசியில்
கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பம், தமிழ் புத்தாண்டு, பொதுத்தேர்வு உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தன. தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றார்.
கன்னியாகுமரி தொகுதி
தமிழகத்தில் எப்போது சட்டசபை தேர்தல் நடைபெறும் என்ற கேள்விக்கு, மே 24ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதில் அளித்தார். அத்துடன் தமிழகத்தில் சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் சேர்த்து தேர்தல் நடக்கும் என்றும் கூறினார்.
கொரோனாவால் பலி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். கொரோனா பரவல் காரணமாக கன்னியாகுமரி தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக போட்டி
கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என தெரிகிறது. வசந்தகுமாருக்கு பதில் அவரது மகன் விஜய் வசந்த் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல் பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக-திமுக இரண்டுமே இதில் போட்டியிடமால் தங்கள் கூட்டணி கட்சிகளை (தேசிய கட்சிகளை) போட்டியிட அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே போட்டி கடுமையாக இருக்கும் என நம்பலாம்.