அடுத்த வீட்டில் அவமானப்பட்டு டிவி பார்த்த வலி தெரியுமா.. கண்ணீர் துடைத்தது கருணாநிதிதானே!
சென்னை: "சாப்பிடப் போறோம்.. டிவி ஆப் பண்ணிருவோம்.. நீ கிளம்பு" என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக இரண்டு வீடு தள்ளி உள்ள உங்கள் சொந்தகார ஆன்டியோ, அங்கிளோ சொல்லும் போது ஏற்படும் வலியை நீங்கள் உணர்ந்து உள்ளீர்களா?
நீங்கள் வீட்டு வாசலைத் தாண்டியதும், மறுபடி வீட்டுக்குள்ளிருந்து, "சன் டிவியின் தமிழ் மாலை" அல்லது, "சின்னத்திரையில் வண்ண கோலங்கள் படைப்பது உங்கள் ராஜ்டிவி" என்ற குரல் ஒலிக்கக் கேட்டு நீங்கள் திடுக்கிட்டு திரும்பி பார்த்தபடியே, உங்கள் வீடுகளுக்கு நடந்து சென்ற ரணம் ஞாபகத்தில் இருக்கிறதா?
அப்படியானால், இந்த நவீன தீண்டாமையை ஒழித்துக் கட்டிய யுகபுருஷன் என்ற மரியாதை, மறைந்த கருணாநிதி மீது உங்கள் அடிமனதில் இருக்கத்தான் செய்யும்.
கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவு நாள்- வைரமுத்து மலர்தூவி நினைவஞ்சலி
வித்தியாசமான 90ஸ்
1990களின் காலகட்டம் வித்தியாசமானது. ஏனெனில், ஏழ்மை மற்றும் உலகமயமாக்கல், இரண்டுமே, நாகப்பாம்பும் சாரைப்பாம்பும் பின்னிப் பிணைவதை போல பிணைந்து கிடந்த காலகட்டம். அதுவரை வானொலிகள் மட்டுமே புழக்கத்தில் இருந்த வீடுகளில், மெல்ல மெல்ல, தொலைக்காட்சிகள் தலை காட்ட தொடங்கின. பிளாக் அண்ட் ஒயிட் டிவி வைத்திருந்தால் ஓரளவுக்கு வசதியானவர்.. அதுவே கலர் டிவி இருந்தால் அந்த ஊரிலேயே முக்கிய புள்ளி என்று பார்க்கப்பட்டார்கள்.
டிவிகள் வந்தன
சர்வதேச சந்தைகள் திறக்கப்பட்டதால், ஆடம்பர பொருட்களின் வரத்து அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற ஊதியமும், வருவாய் ஆதாரமும் பெரும்பாலான இந்தியர்களுக்கு கிடைக்கவில்லை. எனவேதான், 10 வீடுகளுக்கு பொதுவாக ஒருவர் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தனர் மக்கள்.
டிவி வைத்திருக்கும் வீட்டுக்காரர்கள் ராஜா, ராணி போலவும், அவர்கள் வீட்டுக் குழந்தைகள், இளவரசன், இளவரசி போலவும்.. மற்ற குழந்தைகளுக்கு காட்சியளிப்பார்கள். ஒருவகையில் மன்னராட்சி மறுபடி வந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றும் வகையில் இருக்கும் அந்த தோரணை.
திடீரென ஆப்பாகும் டிவி
தொலைக்காட்சி பார்க்க செல்வோர் என்னதான் அந்த ஊரில் பாரம்பரியமுள்ள குடும்பத்தினராக இருந்தாலும், அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த பிறகு அவர்கள் அடிமைகளைப்போலதான் நடத்தப்பட்டார்கள். நல்ல காட்சி ஒன்று ஓடிக்கொண்டிருக்கும்போது, சொல்லிக்காமல் திடீரென டிவியை ஆப் செய்துவிட்டு, நாங்கள் தூங்கப் போகிறோம் என்று சொல்வதும், சாப்பிடப் போகிறோம் என்று சொல்வதும் இதன் ஒரு அங்கம்தான்.
நவீன தீண்டாமை
அதுவரை, ஜாதி தீண்டாமையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகம், 1990களின் தொடக்கத்தில் இது போன்ற ஒரு பொருளாதார தீண்டாமையை பார்க்கத் தொடங்கியது. கிராமங்களில், இன்னும் ஒருபடி இந்த பிரச்சினை அதிகம். ஒரே ஜாதியாக இருந்தால்தான் வீட்டுக்குள் அனுமதி. தங்களை விட குறைவான ஜாதி என்று நினைப்போருக்கு வீடுகளுக்குள் அனுமதி கிடையாது. அவர்களுக்கு தொலைக்காட்சி என்பது.. கேட்டுக்கு வெளியே நடந்து செல்லும்போது, சட்டென கண்ணில் ஒளி பாய்ச்சக்கூடிய ஒரு ஆச்சரிய பெட்டி அவ்வளவுதான்.
சாட்டையெடுத்த கருணாநிதி
ஜாதி தீண்டாமைக்கு எதிராக எவ்வாறு, சாட்டை எடுத்தாரோ அதேபோல இந்த டிவி தீண்டாமைக்கு எதிராகவும் விஸ்வரூபம் எடுத்தார் கருணாநிதி. 2006ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தார். ஆட்சிக்கு வந்ததும் சொன்னபடி செய்தும் காட்டினார் அவர்.
இலவச வண்ணத் தொலைக்காட்சி
ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசமாக கலர் டிவிக்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. நவீன தீண்டாமையை ஒழித்துக் கட்டப்பட்டது. அந்த தொலைக்காட்சியிலும் ஒரு சிறப்பு என்னவென்றால் அதை பயன்படுத்தும் அத்தனை பேரும் கூறக்கூடிய ஒரு வார்த்தை "அடடே கலைஞரை போலவே இந்த ரிமோட் உழைக்கிறதே" என்பதுதான். ஆம்.. எங்கிருந்து அந்த ரிமோட்டை பிடித்து அழுத்தினாலும்.. அது நேராகவோ, சாய்வாகவோ, எந்த மூலையில் இருந்தாலும் அந்த ரிமோட் நச்சென்று வேலை செய்யும். 50,000 ரூபாய்க்கு மேலே செலவிட்டு வாங்கக்கூடிய எல்இடி தொலைக்காட்சிகளில் கூட இப்படி ரிமோட் வேலை செய்வது கிடையாது என்று இப்போதுவரை பலரும் சிலாகிப்பதை பார்க்க முடியும்.
சமூக நீதி
இன்று ஒவ்வொரு வீடுகளாக சென்று தொலைக்காட்சி பார்க்க தேவை கிடையாது. ஏன் பலரும் தொலைக் காட்சிகளையே பார்ப்பது கிடையாது. ஒவ்வொருவரும் மொபைல் போன்களில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் 1980களில் மற்றும் 1990களில் பிறந்த குழந்தைகளுக்கு, தொலைக்காட்சி என்பது ஒரு எட்டாக் கனியாக இருந்தது. அதன் மீது கட்டமைக்கப்பட்ட அந்த அதிகார சுவரும், அதை கருணாநிதி என்ற 'சமூக நீதி போர்வாள்' அடித்து நொறுக்கியதையும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. கருணாநிதியின் 2வது ஆண்டு நினைவு தினமான இன்று, இதை நினைத்து பார்ப்பது பொருத்தமானது.