சென்னை கல்லூரியில், ப்ரோட்டோக்காலை மீறிய ராகுல் காந்தி.. பரபர வீடியோ
சென்னை: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று பாதுகாப்பு ப்ரோட்டோக்காலை மீறி மாணவிகளுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.
சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ராகுல் காந்தி வருகை தந்திருந்தார். அப்போது வழக்கமாக வழங்கப்படும் பாதுகாப்பு 'ப்ரோட்டாகாலை' மீறி மாணவிகள் மத்தியில் சென்று அவர்களுடன் கைகுலுக்கி அளவளாவினார். பல மாணவிகளும், தங்களிடம் இருந்த செல்போனை எடுத்து ராகுல் காந்தியுடன் செல்ஃபிகள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காண்பித்தனர். அவர்கள் மத்தியில், ராகுல் காந்தியின் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று பாதுகாப்பு வழங்குவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கை குலுக்குவது, செல்பி எடுப்பது என்று மாணவிகளுடன் ராகுல் காந்தி சுமார் 5 நிமிடங்கள் செலவிட்டு இருப்பார். நாட்டின் மிகப்பெரிய எதிர்க் கட்சியான காங்கிரசின் தலைவர் ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு இணையான பாதுகாப்பு கெடுபிடிகள் இருந்த போதிலும் அவர் பாதுகாப்பு வரைமுறைகளை தாண்டி மாணவிகளுடன் அளவளாவியது வீடியோவாக பதிவாகி சுற்றி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
When @RahulGandhi broke protocol to greet the students of Stella Maris College. #VanakkamRahulGandhi pic.twitter.com/Yov7PYbj65
— Congress (@INCIndia) March 13, 2019
அதேநேரம் ஏற்கனவே முன்பு சில தலைவர்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிகழ்ந்துள்ளதை மனதில் கொண்டு, இதுபோல பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி ராகுல்காந்தி செல்லும் முயற்சிகளை தேர்தல் பிரச்சார காலத்தில் எங்குமே, முயற்சி செய்யாமல் இருக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி ஆதரவு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பதையும் பார்க்க முடிகிறது.