தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும்? தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பதில் இதுதான்
சென்னை: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது பற்றி, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று பதில் அளித்தார்.
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான 8 பேர் கொண்ட தேர்தல் அதிகாரிகள் குழு நேற்று முதல் சென்னையில் முகாமிட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி இந்த குழு ஆய்வு நடத்தியது. மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபி, அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் தொடர்ந்து ஆலோசனை நடத்தியது இந்த குழு.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்களிப்பு நேரம் 1 மணி நேரம் அதிகரிப்பு.. தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு
ஒரே கட்டமாக தேர்தல்
இந்த நிலையில், இன்று மதியம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன. தேர்தல் நிறைவடைந்த இரண்டு நாட்களுக்குள் முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யுமாறும் பல கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இரு சிறப்பு பார்வையாளர்கள்
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி, பணப் பட்டுவாடாவை தடுக்க, இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு அளிப்பதில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. சில கட்சிகள் அதற்கு ஆதரவாகவும், சில கட்சிகள் தபால் வாக்குகள் வேண்டாம் என்றும் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் கடைசி வாரம்
தமிழ் புத்தாண்டு, பொதுத்தேர்வுகள், கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று பல கட்சிகளும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. இவை அனைத்தையும் தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளும்.
வெப்பம்
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தமிழகத்தில் கடுமையான வெப்பம் நிலவும் என்பதை நாங்கள் அறிந்து இருக்கிறோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற வடமாநிலங்களை போலத்தான் தமிழகத்திலும் அந்த காலகட்டத்தில் மிக அதிக வெப்பநிலை இருக்கும். எனவே இந்த அம்சங்கள் அனைத்தையும் நாங்கள் பரிசீலனை செய்வோம்.
எப்போது தேர்தல்?
ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுமா? எப்போது தேர்தல் நடைபெறும் என்பது பற்றி டெல்லி செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும். மே 24ம் தேதிக்கு முன்பாக, தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். ஏனெனில் அப்போதுதான் தமிழக சட்டசபையின் பதவி காலம் நிறைவடைகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேர்தல் தேதி
மொத்தத்தில்.. தேர்தல் தேதி பற்றி ஏதாவது க்ளூ கொடுக்க நிருபர்கள் கேட்டபோதிலும், அவர் இன்று தெரிவிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் டெல்லியில் தெரிவிப்பதாகக் கூறி விட்டார். ஆனால், மே மாதம் துவங்குவதற்கு முன்பாக அதாவது ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதை சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பு எதிரொலித்தது.