தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் உயிர்தான் முக்கியம்.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு இது நேரம் கிடையாது என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு உத்தரவில், பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழ ஆரம்பித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை என்ற போதிலும், எப்போது இதுபோல அறிவிப்பு வெளியாகி விடுமோ என்ற ஒரு பதட்டமான நிலையில் தான் அவர்கள் உள்ளனர்.
மாணவர்கள் உயிர் முக்கியம்
இந்த நிலையில்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பள்ளிகள் திறப்புக்கான நேரம் இதுவல்ல. பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம். சுகாதாரத் துறை, கல்வித் துறை, வருவாய் துறையுடன் ஆலோசித்து அனைத்து துறைகளும் சேர்ந்துதான் இதில் ஒரு முடிவு எடுக்கும்.
முதல்வர் அறிவிப்பார்
பள்ளிகள் திறப்பு தொடர்பான முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார். ஆனால் இப்போதைக்கு இருக்காது. 8 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் ஆரம்பித்துள்ளன. பஞ்சாயத்துகள் மூலம் இந்த பணிகள் நடக்கிறது.
இட ஒதுக்கீடு உறுதி
எதிர்காலத்தில் வடிவமைக்கப்பட உள்ள வினாத்தாளை கருத்தில் கொண்டு பாடங்கள் குறைக்கப்படும். நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் விரைவில் அமலுக்கு வரும். ஆன்லைன் வகுப்புகளின் செயல்பாடு குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திடீர் அறிவிப்பு
முன்னதாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லலாம் என்று அரசு கூறியிருந்தது. கட்டாயம் கிடையாது என்ற போதிலும் விருப்பத்தின் பேரில் மாணவர்கள் சென்று ஆசிரியர்களிடம் சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பள்ளிகள் திறப்பு
மேலும் பள்ளிகளில் எந்த மாதிரியாக சமூக இடைவெளி பின்பற்றப்படவேண்டும், நோய் தடுக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி எல்லாம் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் மருத்துவ வல்லுனர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த முடிவிலிருந்து அரசு பின்வாங்கியது. எனவே இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு பற்றி எந்த ஒரு அறிவிப்பும் தமிழக அரசு சார்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.