பிளஸ் 2 மாணவர்கள் மறுக் கூட்டலுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு.. பாட வாரியாக கட்டண விவரம் இதோ
சென்னை: பிளஸ் 2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு வரும் 24 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடந்தன. இந்த தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணவ மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்த தேர்வு முடிவுகளை கடந்த 15ம் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. இந்த ஆண்டு மாணவர்கள் 89.41 சதவீதமும், மாணவியர் 94.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். எனவே, மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம் என்ற அளவில் இருந்தது. மாணவர்களை விட மாணவியர் இந்த ஆண்டு 5.39 சதவீதம் பேர் கூடுதல் தேர்ச்சி பெற்றனர்.
தமிழகத்திலேயே முதல் முறை.. சென்னையில் பிளாஸ்மா வங்கி துவக்கம்! எம்எல்ஏ சதன் பிரபாகர் தானம்.. அசத்தல்
அசத்திய மேற்கு மாவட்டங்கள்
பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் பிடித்தது. அங்கு 97.12 சதவீத தேர்ச்சி சதவீதம் இருந்தது. ஈரோடு மாவட்டம் 96.99 சதவீத தேர்ச்சியை பெற்று 2ம் இடத்தையும், கோவை மாவட்டம் 96.39 சதவீத தேர்ச்சியை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து அசத்தின.
மறுக் கூட்டல்
இந்நிலையில்தான், பிளஸ்2 மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு ஜூலை 24 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று, அறிவிப்பு வெளியிட்டது. தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றலாம். தனித்தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
எந்த பாடத்திற்கு எவ்வளவு கட்டணம்
மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305, ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும். மறுமதிப்பீடு/மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க ஒரு மணி நேரத்திற்கு 20 பேர் மட்டுமே வரவழைக்கப்பட வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மதிப்பெண் சான்றிதழ்கள்
பிளஸ்2 மாணவர்கள் வரும் ஜூலை 24 முதல் 30ம் தேதி வரை அவரவர் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம். கொரோனா பிரச்சினைகள் காரணமாக, ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் ஊழியர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை போன்ற பாதுகாப்பு விஷயங்களை அணிவது அவசியமாகும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவர்கள் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டபின் பள்ளிகளில் சென்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.