"ஹை டென்ஷனில்" மேலிடம்.. ஒரே நாளில் 2 ஆக்ஷன்.. காலையில் சஸ்பெண்ட்.. மாலை டிஸ்மிஸ்.. காரணமே வேற போல
ரூபி மனோகரனின் சஸ்பெண்ட் ஏன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
சென்னை: ரூபி மனோகரனுக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.. அதாவது காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட், மாலையில் ரத்தாகிவிட்டது.. ஒரே நாளில் என்ன நடந்தது? ஏன் இந்த திடீர் குழப்பம்?
ரூபி மனோகரன்... காங்கிரஸ் கட்சியில் இவர் சீனியர்.. தொழிலதிபர்.. நாங்குநேரி எம்எல்ஏ.. கேஎஸ் அழகிரியின் நெருக்கமானவராக முதன்முதலாக அரசியலில் அறியப்பட்டவர்.. இன்று, அதே கேஎஸ் அழகிரிக்கு எதிரியாக களத்தில் நின்று, அவருக்கே டஃப் கொடுத்து கொண்டிருப்பவர்.
சமீபத்தில் நடந்து முடிந்த காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 2 வட்டாரத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள்.. அதாவது, ஏற்கெனவே பொறுப்பில் இருந்தவர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில், அவர்களை மாற்றியதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
என் ஆசையில மண்ணை அள்ளி போட்டுட்டாங்க.. ரொம்ப வருத்தமாக இருக்கு.. புலம்பிய காங்கிரஸ் ரூபி மனோகரன்
ரத்தக்களறி
அதனால் கடந்த 15-ம் தேதி நெல்லையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் 7 பஸ்களை பிடித்துக் கொண்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு நேரிலேயே சென்று, மாநிலத் தலைவர் அழகிரியிடம் நியாயம் கேட்டார்கள்.. அப்போது திடீரென கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்த ஒரு கும்பல், நெல்லையிலிருந்து சென்றவர்கள்மீது கடுமையாகத் தாக்கியது.. 3 பேருக்கு ரத்தம் கொட்டியது.. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆதரவாளர்களுக்கும், கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடந்த உருட்டுக்கட்டை தாக்குதலில் ரத்தகளறியானது சத்தியமூர்த்திபவன்.
வாசித்த புகார்கள்
இது ஏகத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மூத்த தலைவர்களும் முக்கிய நிர்வாகிகளும் அழகிரிக்கு எதிராக ஒன்றிணைந்தனர். அவருக்கு எதிராக மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து புகார் பட்டியலையும் வாசித்தனர். இதற்கிடையே, தமிழக சட்டமன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவரும், மூத்த தலைவருமான கே.ஆர்.ராமசாமி தலைமையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆக்ஷனில் குதித்தது.
ஆக்ஷன்
ரூபி மனோகரனுக்கும், அழகிரியின் ஆதரவாளரான காங்கிரசின் எஸ்.சி./எஸ்.டி.பிரிவு தலைவர் ரஞ்சன்குமாருக்கும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், தற்போது அதிரடியாக ரூபி மனோகரனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டார் கே.ஆர்.ராமசாமி. இது காங்கிரசில் மேலும் அதிர்ச்சியை தந்தது. அந்த உத்தரவு வந்த சில மணி நேரங்கள் கடந்த நிலையில், அந்த நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவு பிறப்பித்தார் காங்கிரஸின் மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ். இதன் பின்னணியில் நடந்தது என்ன?
திடீர் டென்ஷன்
ரூபி மனோகரன் நீக்கப்பட்டதாக கே.ஆர்.ராமசாமி அறிவித்ததும் டென்ஷனானார்கள் மூத்த தலைவர்கள். காரணம், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு என்பது, ஒரு பிரச்சனையை விசாரித்து அதன் பிறகு தனது முடிவினை தமிழக காங்கிரஸ் தலைவருக்கு பரிந்துரையாகத்தான் தரமுடியும். உத்தரவு போட ஒழுங்கு நடவடிக்கைக்குழுவுக்கு அதிகாரம் கிடையாது. கட்சியின் மாநில பொறுப்பில் உள்ள ஒருவருக்கு எதிராக, ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்திருந்தால் அதன் மீது உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் அகில இந்திய தலைமைக்குத்தான் உண்டு.
ஆத்திரம் ஆத்திரமாய்
அந்த வகையில், மாநில பொருளாளராக இருக்கும் ரூபிமனோகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ, கட்சியிலிருந்து நீக்கவோ மாநில தலைவருக்கோ, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கோ அதிகாரம் இல்லாதபோது, அவரை நீக்குவதாக எப்படி அறிவிக்க முடியும் ? ஆக, சட்டவிதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறது ஒழுங்கு நடவடிக்கை குழு. அதுவும் கே.ஆர். ராமசாமி தன்னிச்சையாக இந்த முடிவை எடுக்கவில்லை. அழகிரியின் அழுத்தம்தான் அவரை அந்த முடிவை எடுக்க வைத்திருக்கிறது. இந்த ஆத்திரம்தான் மூத்த தலைவர்களை கொந்தளிக்க வைத்ததுடன், தினேஷ்குண்டுராவை தொடர்புகொண்டு கடுமையாக பேசியிருக்கிறார்கள்.
சர்வாதிகாரி
அத்துடன், அகில இந்திய தலைவர் கார்கேவுக்கும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கும், ராகுல்காந்திக்கும் என டெல்லிக்கு மின்னஞ்சல் அனுப்பினார்கள் மூத்த நிர்வாகிகள். குறிப்பாக, கட்சியின் சட்டவிதிகளுக்கு புறம்பாக சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார் அழகிரி என்றே குற்றம்சாட்டியுள்ளனர். அதேசமயம், தனக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை நியாயமற்றது என்றும், விதிகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தனது எல்லையை மீறி நடந்து கொண்டிருக்கிறது என்றும், இதற்கெல்லாம் காரணம், கே.எஸ். அழகிரி தான் என்றும் தினேஷ்குண்டுராவிடம் சரமாரியாக கோபம் காட்டியுள்ளார் ரூபிமனோகரன். இந்த நிலையில்தான், ரூபிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் தினேஷ்குண்டுராவ்.
ரத்தம் + காங்கிரஸ்
இதனிடையே, தன்னுடைய சஸ்பெண்ட் நிறுத்தி வைத்துள்ளது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய ரூபி மனோகரன், "காங்கிரஸ் கட்சி பலமாக திசையை நோக்கி செல்கிறது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற பொய்யான தகவல் துடைத்தெறியப்பட்டு உள்ளது... காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவாகும்... காங்கிரஸ் கட்சியை எனது தெய்வமாகவும் குடும்பமாகவும் பார்க்கிறேன். என்னுடைய உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது... இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன். காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு இதனை காங்கிரஸ் செய்திருக்கிறது... அன்னை சோனியா காந்திக்கு நன்றி" என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.