சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்படுமா? ஹைகோர்ட்டில் இன்று தமிழக அரசு என்ன சொன்னது?
சென்னை: சென்னையில் கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகளை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, முடித்திருத்தம் செய்யக்கூடிய சலூன் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடித்திருத்துவோர் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் முனுசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஊரடங்கிற்கு முன்னதாக மாதம், 15 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஈட்டி வந்த சுமார் 10 லட்சம் முடித்திருத்த தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களாக எந்த வித வருவாய் இல்லாமல் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு முடித்திருத்த தொழிலாளருக்கும், தலா 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். முடித்திருத்த தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினி சாவினால் பாதிக்கப்படும் முன் அனைத்து சலூன் கடைகளையும் உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவும் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே மே 23ம் தேதி தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சென்னையை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இடம் பெயர் தொழிலாளர் பயண கட்டணம், உணவு, நீருக்கு மாநில அரசுகளே பொறுப்பு- சுப்ரீம்கோர்ட் உத்தரவு
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னையில் பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும் சலூன் கடைகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது தமிழக அரசு வழக்கறிஞர், சென்னையில் கள நிலவரத்தை ஆய்வு செய்து சலூன் கடையை திறக்க அரசு உரிய நடவடிக்கும் என்று சுட்டிக்காட்டினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.