வடகிழக்கு பருவ மழை எப்போது முடியும்.. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு
சென்னை: தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.. ஒருசில இடங்களில் கனமழை பதிவாகி உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், கோவை,ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகப்பட்டினம், ஈச்சன் விடுதி (தஞ்சை) தலா 9 செமீ மழை பதிவாகி உள்ளது. ராமநாதபுரத்தில் 8 செமீ, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பாபநாசம் (நெல்லை), மண்டபம் (ராமநாதபுரம்) ஆகிய ஊர்களில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது. மதுக்கூர் (தஞ்சாவூர்), மணிமுத்தாறு (நெல்லை) ராமேஸ்வரம், தலைஞாயிறு ஆகிய ஊர்களில் தலா 6 செமீ மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 5 செமீ மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை இன்னும் முடியாமல் நீண்டு கொண்டு மழை பெய்து வருவது மகிழ்ச்சி என்றாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள இந்த நேரத்தில் பெய்யும் மழை, பயிர்களை அழுக வைத்து வீணாக்கி விடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளை உற்சாகப்படுத்தும் பதிலை வானிலை மையம் கூறியுள்ளது. தென் மாநிலங்களில் இருந்து வருகின்ற 19ம் தேதி விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.